92 வயதில் 84வது கௌரவ டாக்டர் பட்டம்.. வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சாமிநாதன் சாதனை!
92 வயதான எம்.எஸ்.சாமிநாதன் 84 கௌரவ டாக்டர் பட்டங்களைப் பெற்று சாதனைப் படைத்துள்ளார்.
சென்னை: தரமணியில் உள்ள எம்.எஸ்.சாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் நேற்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், இந்தியாவில் பசுமைப் புரட்சிக்கு வித்திட்ட வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சாமிநாதனுக்கு சிறப்பு டாக்டர் பட்டமும் விருதும் வழங்கப்பட்டது.
இதன் மூலம், 92 வயதாகும் இந்தியாவின் வேளாண் மரபியல் விஞ்ஞானி எம்.எஸ்.சாமிநாதன் 84 கௌரவ டாக்டர் பட்டங்களை பெற்ற சாதனையைப் படைத்துள்ளார். இதில் 24 வெளிநாட்டு பல்கலைக்கழங்களில் இருந்து வழங்கப்பட்ட கௌரவ டாக்டர் பட்டங்களும் அடங்கும்.
எம்.எஸ்.சாமிநாதனுக்கு கௌரவ டாக்டர் பட்டத்தை குவாலியரில் உள்ள ஐடிஎம் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் டாக்டர் கமல் காண்ட் திவிவேதி வழங்கினார்.
டாக்டர் பட்டத்தைப் பெற்றுக்கொண்ட சாமிநாதன் தனது ஏற்புரையில், "பசி பட்டினியை முழுவதுமாக ஒழிப்பதே நிலையான விவசாயம்" என்று கூறினார். மேலும், குவாலியர் ஐடிஎம் பல்கலைக்கழகம் 1000 வேளாண் பட்டதாரிகளை உருவாக்கியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என்று தெரிவித்தார்.