பொங்கலை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் விழாக்கோலம்.. குவியும் பக்தர்கள்!
பொங்கலை முன்னிட்டு பாத யாத்திரை பக்தர்கள் திருச்செந்தூரில் குவிய தொடங்கியுள்ளனர்.
திருச்செந்தூர்: தை பொங்கலை முன்னிட்டு நெல்லை, குமரி, தூத்ததுக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயிலுக்கு பாத யாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர்.
மார்கழி மற்றும் தை மாதங்களில் ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து திருச்செந்தூர் கோயிலுக்கு வருவது வழக்கம். குறிப்பாக பொங்கல் காலங்களில் திருச்செந்தூர் கோயிலில் கூட்டம் அலைமோதும். பக்தர்கள் அலகு குத்தி, காவடி எடுத்து வருவதோடு ஆட்டோ மற்றும் வேன்களில் முருகன் படங்களை அலங்காரம் செய்து பக்தி பாடல்கள் ஒலி பரப்பியபடி வருகின்றனர்.
இதனால் நெல்லை-தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலை முருக பக்தர்களால் நிரம்பி வழிகிறது. முருக பக்தர்கள் வசதிக்காக அங்காங்கே தனியார் மற்றும் சேவை அமைப்பினர் அன்னதானம் வழங்கி வருகின்றனர்.நாளை பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதால் அதிகாலை ஒரு மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது.
ஒன்றரை மணிக்கு விஸ்வரூப தீபாரதனை, 4 மணிக்கு அபிஷேகம், 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம், 12 மணிக்கு உச்சிகால தீபாராதனையும், தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் நடக்கிறது. பொங்கல் மறுநாள் காணும்பொங்கல் அன்றும் திருச்செந்தூரில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.