"அம்மா" உள்ளே .. 43வது ஆண்டு தொடக்க விழாவைக் கொண்டாட அழைப்பு விடுக்கும் அதிமுக!
இது தொடர்பாக அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
"புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கி 42 ஆண்டுகள் நிறைவடைந்து, வருகின்ற 17ம் தேதி (வெள்ளிக் கிழமை) அன்று 43வது ஆண்டு தொடங்குவதை முன்னிட்டு, அன்று காலை 10 மணி அளவில், சென்னை, ராயப்பேட்டை, தலைமைக் கழக வளாகத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு கழக அவைத் தலைவர் மதுசூதனன் மாலை அணிவித்து, கழகக் கொடியினை ஏற்றி வைத்து, ‘தொடக்க நாள் விழா சிறப்பு மலரை' வெளியிட உள்ளார்.
இந்த நிகழ்ச்சியில், தலைமைக் கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், எம்.ஜி.ஆர். மன்றம், ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்து கொள்வார்கள்.
தமிழகத்திலும், கழக அமைப்புகள் செயல் பட்டுக் கொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, கேரளா, புதுடெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் 17ம் தேதி ஆங்காங்கே கழகக் கொடியினை ஏற்றி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என்று கூறப்பட்டுள்ளது.
அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா, சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனைப் பெற்று கர்நாடகா மாநிலம் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அக்டோபர் 17ஆம் தேதிதான் அவரது ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. இந்த சூழ்நிலையில், அ.தி.மு.க.வின் 43 ஆம் ஆண்டு தொடக்க விழா கொண்டாடப்பட இருக்கிறது குறிப்பிடத்தக்கது.