கல் வீசி தாக்கியபோது பஸ் மோதி படுகாயமடைந்த அதிமுக தொண்டர் மரணம்
நெல்லை: நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரத்தில் சனிக்கிழமை அரசுப் பேருந்து மோதி காயமடைந்த அதிமுக தொண்டர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் கடந்த சனிக்கிழமையன்று பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரும் குற்றவாளிகள் என அறிவித்த நீதிபதி, அவர்களுக்கு தலா நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 100 கோடி அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
இதனால் ஆவேசமடைந்த அதிமுகவினர் தீர்ப்பு அறிவிக்கப் பட்டதிலிருந்து மாநிலத்தின் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லையிலிருந்து தென்காசி நோக்கிச் சென்ற அரசு பேருந்தை பாவூர் சத்திரத்தைச் சேர்ந்த நாலாயிரம் என்ற அதிமுகத் தொண்டர் கல்வீசித் தாக்கியுள்ளார். ஆனபோதும், பேருந்தை நிறுத்தாமல் சென்றார் ஓட்டுநர்.
அப்போது எதிர்பாராதவிதமாக கல்வீசிய நாலாயிரம் மீது பேருந்து மோதியது. இதில் பலத்த காயமடைந்த நாலாயிரம், உடனடியாக சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவீர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார்.