வந்தது இடைத் தேர்தல்.. நாளைக்கே விருப்ப மனு.. மின்னல் வேகத்துக்கு மாறிய அதிமுக, திமுக
நாளை முதல் விருப்ப மனு அளிக்கலாம் என அதிமுக, திமுக அறிவித்துள்ளது
Recommended Video
சென்னை: இரண்டில் ஒன்று பார்த்துவிடலாம் என அதிமுக, திமுக இறங்கிவிட்டது போலும்.. நடக்க போகும் இடைத்தேர்தலுக்கு நாளைக்கே விருப்ப மனுவை அளிக்கலாம் என இரு கட்சிகளுமே மின்னல் வேகத்தில் அறிவித்து அரசியல் வட்டாரத்தை தட்டி எழுப்பியுள்ளனர்.
தமிழ்நாட்டில் நாங்குநேரி, விக்கிரவாண்டி, புதுச்சேரி காமராஜர் நகர் சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 21-ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.
இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் வரும் செப்டம்பர் 23ம் தேதி அதாவது வர்ற திங்கட்கிழமை தொடங்குகிறது. செப்டம்பர் 30-ம் தேதி வரை மனு தாக்கல் செய்யலாம்.
ஹரியானா தேர்தல்: ஆளுக்கொரு திசையில் சிதறிய எதிர்க்கட்சிகள்... ஆட்சியை எளிதாக தக்க வைக்கும் பாஜக
அறிவிப்பு
மனுக்கள் பரிசீலனை அக்டோபர் 1-ம் தேதி என்றும், மனுக்களை வாபஸ் வாங்க கடைசி நாள் அக்டோபர் 3-ம் தேதி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அதிமுக, திமுக இரு கட்சிகளும் அதிரடியாக தேர்தல் வேலையில் இறங்கிவிட்டன. இவர்கள் இருவருமே இந்த தேர்தலுக்காகவே காத்துகிடந்தவர்கள் போல, மின்னல் வேகத்தில் இறங்கி விட்டனர்.
அதிமுக
நாளை முதல் விருப்ப மனு வழங்கலாம் என்று அதிமுக சொல்லிவிட்டது. இது சம்பந்தமாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இருவரும் கூட்டாக சேர்ந்து ஒரு அறிக்கையும் வெளியிட்டுள்ளனர்.
விக்கிரவாண்டி
அதில், "விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் 21-10-2019 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, போட்டியிட விரும்புவோர், தலைமைக் கழகத்தில் நாளை காலை 10 முதல் மாலை 5 மணி வரையிலும், திங்கட்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையிலும் விண்ணப்ப கட்டணத் தொகையாக ரூ.25 ஆயிரம் செலுத்தி, விண்ணப்ப படிவங்களை பெற்று பூர்த்தி செய்து அப்படிவங்களை 23-9-2019 அன்று பிற்பகல் 3 மணிக்குள் தலைமைக் கழகத்தில் வழங்க வேண்டும்" என கேட்டுக் கொண்டுள்ளனர்.
திமுக பொதுக்குழு
இதேபோல, விக்கிரவாண்டி சட்டசபை தொகுதியில் திமுக போட்டியிடும் என்று முக ஸ்டாலின் அதிரடியாக அறிவித்துள்ளதுடன் விக்கிரவாண்டி தொகுதிக்கு நாளை விருப்ப மனு பெறப்படும் என்றும் தெரிவித்துள்ளார். வரும் 6-ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் நடப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
விருப்ப மனு
திமுக தலைவராக ஸ்டாலின் பதவியேற்று நடைபெறவிருந்த முதல் பொதுக்கூட்டம் என்பதால், ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்புகள் ஏற்பட்டு இருந்தன. ஆனால், இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், இந்த பொதுக்குழு கூட்டத்தை ஒத்திவைப்பதாகவும், தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கட்சியின் பொதுச்செயலாளர் அறிக்கை விடுத்துள்ளார்.
பரபரப்பு
அப்படியானால், இந்த இடைத்தேர்தலை சந்திக்க அதிமுகவை போலவே திமுகவும் அதிக ஆர்வம் காட்ட தொடங்கி உள்ளது. அதனால்தான் திமுக, அதிமுக இரு மெகா கட்சிகளுமே நாளைக்கே விருப்பமனுவை வழங்கலாம் என அறிவித்து ஜரூர் வேலையில் இறங்கி உள்ளனர். இதனால் அரசியல் வட்டாரமே பரபரத்து காணப்படுகிறது.