1,81,15,825 வாக்குகளை அள்ளிய அதிமுக: அப்படியே ஜெ. பக்கம் திரும்பிய புதிய வாக்காளர்கள்!
சென்னை: அதிமுகவின் அமோக வெற்றிக்கு புதிய வாக்காளர்கள் அள்ளித்தந்த அமோக வாக்குகள்தான் என்று தெரியவந்துள்ளது.
நடைபெற்று முடிந்த 16வது லோக்சபா தேர்தலில் அ.தி.மு.கவுக்கு 1,81,15825 வாக்குகள் கிடைத்துள்ளது. கடந்த லோக்சபா தேர்தலில் பெற்ற வாக்குகளை விட, இது இரு மடங்கு அதிகம்.
இத்தேர்தலில் தனித்து போட்டியிட்டு 37 தொகுதிகளில் அதிமுக வெற்றிபெற புதிதாக வாக்களித்தவர்களில் வாக்குகள் அப்படியே அதிமுகவிற்கு வந்து சேர்ந்ததுதான்.
தோல்வி என்ன காரணம் என்று பிற கட்சிகள் ஆலோசித்துக் கொண்டிருக்கையில் அதிமுகவின் வெற்றிக்கான காரணங்களைக் தெரிவிக்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
அதிரடி வியூகம்
முதல்வர் ஜெயலலிதாவின் அதிரடி வியூகம் தான் இந்த வெற்றிக்குக் காரணம் என்கின்றனர். அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் பிரசார யுக்தி, இளைஞர்களின் வாக்குகளை அதிக அளவில் ஈர்த்தது.
வாட்ஸ்ஆஃப் பிரசாரம்
எஸ்.எம்.எஸ் மூலமும், வாட்ஸ் ஆப் மூலம் முதல்வரின் சாதனை வீடியோக்கள், வாக்காளர்களின் செல்போனில் தொடர்பு கொண்டு முதல்வர் ஜெயலலிதா பேசும் ஒலி நாடா, வீடியோவில் ஜெயலலிதா வாய்ஸ் ஆகியவை புதிய வாக்காளர்களை பெரிதும் கவர்ந்தது. இதன் காரணமாகவே அதிமுக அதிக தொகுதிகளை கைப்பற்றியது.
நன்றி சொல்லும் ஜெ.
தேர்தலில் வெற்றி பெற்றதுடன் நின்றுவிடாமல் தற்போது வாக்காளர்களை செல்போனில் தொடர்பு கொண்டு முதல்வர் நன்றி தெரிவிக்கும் ஒலிநாடாவும் அக்கட்சியின் தொழில்நுட்ப பிரிவால் அனுப்பப்பட்டு வருகிறது.
திமுகவிற்கு கிலி
அதேசமயம் திமுகவை புதிய வாக்காளர்கள் யாருமே கண்டுகொள்ளவில்லையாம். 2009ம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் திமுக அணி 1 கோடியே 29 லட்சம் வாக்குகளைப் பெற்றது. அன்று அந்த அணியில் இருந்த காங்கிரஸ் தனித்து நின்று 18 லட்சம் வாக்குகளைப் பெற்றுள்ளது.
குறைந்து போன வாக்குகள்
அதை தவிர்த்துவிட்டு பார்த்தால் இம்முறை திமுகவிற்கு 39 தொகுதிகளிலும் 1 கோடியே 11 லட்சம் வாக்குகள் கிடைத்திருக்கவேண்டும். ஆனால் திமுகவிற்கு கிடைத்த வாக்குகள் 1 கோடியே 8 லட்சம்தான் என்கின்றது புள்ளிவிபரம்.
234 சட்டமன்றத்தொகுதிகளில்
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் திமுக தலைவர் கருணாநிதியின் திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் மட்டுமே ஏ.கே.எஸ் விஜயன் 1800 வாக்குகளை கூடுதலாக பெற்றாராம். அதேபோல பாளையங்கோட்டையில் 900 வாக்குகளும், ஐ.பெரியசாமியின் ஆத்தூர் தொகுதியில் 9000 வாக்குகளும் திமுக முன்னணி பெற்றது.
சட்டமன்ற தேர்தலின் போது
2011ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது இருந்த மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 4.59 கோடி. கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட புதிய வாக்காளர் பட்டியலில், 5.37 கோடி வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். லோக்சபா தேர்தலுக்கு முன்புவரை வாக்காளர்கள் பெயர் சேர்க்கப்பட்டது.
புதிய வாக்காளர்களின் மனநிலை
புதிதாக சேர்க்கப்பட்ட வாக்காளர்கள் பெரும்பாலோனோர் அதிமுகவிற்கு ஆதரவாக வாக்களித்ததே அக்கட்சியின் பிரம்மாண்ட வெற்றிக்குக் காரணமாக அமைந்துள்ளது என்கின்றனர். திமுகவை புதிய வாக்காளர்கள் புறக்கணிக்க முக்கிய காரணம், 2ஜி ஊழல் கறை தான் என்கின்றனர்.