ஜஸ்ட் 24,383 வாக்குகளில் ஆட்சியை பிடித்த அதிமுக.. கோட்டைவிட்ட திமுக
சென்னை: நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிமுக 134 தொகுதிகளில் வெற்றி பெற்று அரியணையை மீண்டும் கைப்பற்றியது. திமுக கூட்டணியோ 98 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
வாக்கு சதவீத அடிப்படையிலும் இரு கட்சிகளுக்கு நடுவே 1 சதவீதம் அளவுக்குதான் வித்தியாசம் இருந்தது. இதனால்தான் இந்த வெற்றியை அதிமுகவால் அதிகம் கொண்டாட முடியவில்லை.
இதில் மற்றொரு தகவல் என்னவென்றால், அதிமுக ஆட்சியமைக்கவும், திமுக ஆட்சியை பிடிக்க முடியாமல் போனதற்கும், வெறும் 24,383 வாக்குகள்தான் காரணமாக இருந்துள்ளது.
வெற்றி, தோல்வி காரணம்
24,383 வாக்குகள் வித்தியாசம்தான் திமுக கூட்டணி 18 தொகுதிகளில் தோற்க காரணம். அதிமுக கூட்டணி அந்த தொகுதிகளில் ஜெயிக்கவும் இதுவே காரணம். இந்த 18 தொகுதிகளில் திமுக வென்றிருந்தால் அந்த கட்சி ஆட்சியை பிடித்திருக்கும்.
ராதாபுரம் 49 ஓட்டு
ஏனெனில் 18 தொகுதிகளில் மிக சொற்ப எண்ணிக்கையிலேயே திமுக தோற்றுள்ளது. அந்த விவரம் இதுதான்:
ராதாபுரம் - 49 ஓட்டு வித்தியாசத்தில் அதிமுக வெற்றி, கோவில்பட்டி - 428, கரூர் - 441, தென்காசி - 462, ஒட்டப்பிடாரம் - 493, பெரம்பூர் - 579, திருப்போரூர் - 950, பர்கூர் - 963, பேராவூரணி - 964 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக கூட்டணி தோற்றுள்ளது.
தொகுதிகள்
கிணத்துக்கடவு - 1332, ஆவடி - 1395, அரியலூர் - 1753, சிதம்பரம் - 1945, மொடக்குறிச்சி - 2222, விருகம்பாக்கம் - 2333, ஊத்தாங்கரை - 2613, கெங்கவள்ளி - 2622, அறந்தாங்கி - 2837 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக தோற்றுள்ளது.
5 அமைச்சர்கள் தோல்வி
தேர்தலில், முந்தைய, ஜெயலலிதா ஆட்சியில் அமைச்சர்களாக இருந்தவர்களில் 5 பேர் தோல்வியை தழுவினர். ஆட்சிக்கு கொண்டு வரும் கட்சியின் முக்கிய பிரமுகர்களை வாக்காளர்கள் தோற்கடிப்பது வழக்கம் இல்லை. ஆனால் இம்முறை அதிலும் குழப்பம் ஏற்பட, மக்களின் மாறுபட்ட மனநிலைதான் காரணம்.
வாக்கு பிரிப்பு
மக்கள் நல கூட்டணி, பாஜக, பாமக, நாம் தமிழர் போன்ற கட்சிகள் தனித்து போட்டியிட்டு கணிசமான வாக்குகளை ஈர்த்ததால் எஞ்சிய வாக்குகள் கன்னாபின்னாவென சிதறி இப்படி, ஒரு நெருங்கிய வெற்றி-தோல்வியை அதிமுக-திமுகவுக்கு கொடுத்துள்ளது. இந்த வாக்கு தகவல் தற்போது வாட்ஸ்அப்பில் பரவி வருகிறது.
கணித்த கருணாநிதி
இதனால்தான் பழம் கனியட்டும் என்று காத்திருப்பதாக விஜயகாந்த்துக்கு, திமுக தலைவர் கருணாநிதி முக்கியத்துவம் கொடுத்துள்ளார் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.