சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் அதிமுக: எதிர்கட்சிகளுக்கு பதிலடி கொடுக்க ஜெ., சூப்பர் பிளான்
சென்னை: 2016ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை சந்திக்க எதிர்கட்சிகளை விட விறுப்பாக தயாராகி வருகிறது ஆளும் கட்சியான அதிமுக. பாமக மண்டல மாநாடு நடத்த, தேமுதிக மக்களுக்காக மக்கள் பணி கூட்டம் நடத்த, திமுக நமக்கு நாமே பயணம் செய்ய அதிமுக தலைமையோ அமைதியாக தொண்டர்களை ஒருங்கிணைக்கும் வேலைகளை தொடங்கியுள்ளது.
அதிமுகவின் 44வது ஆண்டுவிழாவை தமிழகம் முழுவதும் அதிமுகவினர் எழுச்சியாக கொண்டாடி வரும் வேளையில் மகத்தான வெற்றி பெற வேண்டும் என்றும் எனக்கு குடும்பம் என்று எதுவும் இல்லை. உங்களுக்காகவே நான் உயிர்வாழ்கிறேன். உங்களுக்காக சேவை செய்ய கடவுள் இட்ட கட்டளை என்றும் கொடநாட்டில் இருந்து உருக்கமாக கடிதம் எழுதியிருக்கிறார் ஜெயலலிதா.
டிசம்பர் மாதத்தில் அதிமுகவின் பொதுக்குழு கூட உள்ள நிலையில், முதற்கட்டமாக அக்டோபர் இறுதியில் நீலகிரியில் அதிமுகவின் செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று அதிமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாவட்ட செயலாளர்களுடன் சந்திப்பு
சட்டமன்ற கூட்டத் தொடர் முடிந்ததுமே கொடநாடு செல்ல திட்டமிட்டிருந்தார் ஜெயலலிதா. உட்கட்சி தேர்தல் அறிவிப்புகள் வெளியிடுவதில் தாமதம் ஆனதால், சிறுதாவூர் சென்ற ஜெயலலிதா, அங்கே ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக் கொண்டு சென்னை திரும்பினார். கடந்த 12ம் தேதி புதிய மாவட்டச் செயலாளர்கள் சந்தித்த ஜெயலலிதா, முக்கிய ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
புதன்கிழமை, புதன் ஓரை
அ.தி.மு.க உட்கட்சி தேர்தலில் தேர்வான மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பிற நிர்வாகிகளின் பதவி ஏற்பு விழாவை கடந்த புதன்கிழமை மதியம் ஒன்றரை மணி முதல் 3 மணிக்குள் நடத்தி அதன் போட்டோ விவரங்களை தலைமைக்கு அனுப்பும்படி உத்தரவு பிறப்பித்தாராம். புதன்கிழமை, புதன் ஓரை என்பதால் அதன்படி ஒரே நேரத்தில் பதவியேற்றனராம் நிர்வாகிகள்.
கொடநாட்டில் ஆட்சி
அக்டோபர் 14ம் தேதி கொடநாடு கிளம்பினார் ஜெயலலிதா. ஓய்வுக்காக போனாலும் அங்கிருந்தே சில முக்கிய திட்டங்களை வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கி வைக்க திட்டமிட்டுள்ளாராம். இது பற்றியே கடந்த 13ம் தேதி அமைச்சர்களுக்கு சில உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளாராம்.
110 விதி அறிவிப்புகள்
சட்டசபையில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் பற்றி ஒவ்வொரு துறை செயலரிடம் ரிப்போர்ட் கேட்டுள்ளார் முதல்வர் ஜெயலலிதா. அனைவரும் தலைமைச் செயலர் ஞானதேசிகனிடம் கொடுத்த பின்னர் முதல்வர் பார்வைக்கு அவை அனுப்பிவைக்கப்படுமாம்
அமைச்சர்களுக்கு ஆலோசனை
முக்கிய துறைகளை கைவசம் வைத்திருக்கும் அமைச்சர்களுக்கு பலமான ஆலோசனை வழங்கியிருக்கும் ஜெயலலிதா, துறை ரீதியிலான திட்டங்களை ஜனவரி கடைசிக்குள் தொடங்கி விட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளராம்.
மின்துறை, தொழில்துறை
அறிவிக்கப்பட்ட மின் திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று நத்தம் விஸ்வநாதனிடம் அறிவுறுத்தியுள்ளாராம் முதல்வர். அதேபோல முதலீட்டாளர்கள் மாநாட்டில் போடப்பட்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில் ஜனவரிக்குள் புதிய தொழிற்சாலைகளுக்கு அடிக்கல் நாட்டும் பணியை முடித்து விட வேண்டும் என்று தங்கமணிக்கும் உத்தரவிட்டுள்ளாராம்.
மகத்தான வெற்றி
அதேபோல சட்டசபை தேர்தலுக்காக முக்கிய ஆலோசனைகளை நடத்தும் ஜெயலலிதா, மகத்தான வெற்றிக்காக பாடுபட வேண்டும் என்று தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். இம்முறை உருக்கமாகவும் கடிதம் மூலமாக பேசியுள்ளார்.
செயற்குழு, பொதுக்குழு
அக்டோபர் இறுதியில் நீலகிரியில் செயற்குழு கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 300 உறுப்பினர்கள் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல ஜெயலலிதா கொடநாட்டில் இருந்து டிசம்பரில் திரும்பிய பின்னர் பொதுக்குழு கூட்டம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அதிமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
மக்களை சந்திக்க திட்டம்
பிப்ரவரியில் இருந்து தமிழகத்தின் முக்கிய நகரங்களில் மக்களை சந்திக்கப் போகிறாராம் ஜெயலலிதா. பிரம்மாண்ட பொதுக்கூட்டங்களையும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாம். இது எதிர்கட்சிகளுக்கு பலமான பதிலடியாக அமையும் என்கின்றனர்.