சென்னை அதிமுக கவுன்சிலர்களுடன் ஓபிஎஸ் அவசர ஆலோசனை: மேயருக்கு அழைப்பில்லை
சென்னை: சென்னையில் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சென்னை மேயர் பங்கேற்காததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகளைத் தற்போதே கட்சிகள் தொடங்கிவிட்டன.
இந்நிலையில், நேற்று மாலை சென்னை அதிமுக தலைமை நிலையத்தில் அக்கட்சியின் கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் தேர்தல் பணிகள் மற்றும் சென்னை வெள்ளத்தின்போது மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து ஆலோசித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், தேர்தலை எதிர்கொள்ளும் விதம் குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. மக்களுக்கு அதிமுக கவுன்சிலர்கள் மீது நம்பிக்கை குறைந்து வருவதாகவும், அதனை சீர் செய்யும் வகையில் உடனடியாக நலப்பணிகளை மேற்கொள்ளும்படி அறிவுறுத்தவுமே கட்சி மேலிடம் இந்த அவசரக் கூட்டத்தை ஏற்பாடு செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அனைத்து தொகுதிகளிலும் வெற்றி என்பதை இலக்காக கொண்டு அதிமுக தொண்டர்கள் செயல்பட வேண்டும் என இந்தக் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அவசரமாக நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் சென்னை மேயர் சைதை துரைசாமி கலந்து கொள்ளவில்லை. அவருக்கு கட்சித் தலைமை அழைப்பு விடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இது கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.