சென்னை மணலியில் அதிமுக கவுன்சிலர் வெட்டிக் கொலை.. கடைகள் அடைப்பு... பதற்றம் - போலீஸ் குவிப்பு
திருவள்ளூர்: மணலியில் அ.தி.மு.க. கவுன்சிலர் மர்மநபர்களால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டதையடுத்து அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. அந்த பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்,
மணலி மண்டலம், 21-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலராக இருப்பவர் முல்லை ஞானசேகர். அப்பகுதி மக்களிடையே மிகவும் பிரபலமானவர்.
இந்நிலையில், முல்லை ஞானசேகர் இன்று மாலை மணலி பேருந்து நிலையம் அருகே சென்றுகொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனங்களில் வந்த மர்ம நபர்கள் அவரை சுற்றி வளைத்தனர். சுதாரித்து தப்பிக்க முயற்சி செய்வதற்குள் அந்த நபர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டிச் சாய்த்தனர். இதனால் சுருண்டு விழுந்த முல்லை ஞானசேகர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். அவர் கொலை செய்யப்பட்டதால் அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு கருதி நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
முல்லை ஞானசேகரை கொன்ற கொலையாளிகளை போலீசார் தேடிவருகின்றனர். மேலும், கொலைக்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பதற்றம் நிலவுவதை அடுத்து போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.