மதுரையில் அதிமுக கவுன்சிலர் தூக்கிட்டு தற்கொலை !
மதுரை: மதுரை மாநகராட்சி 7 -வது வார்டு அதிமுக கவுன்சிலர் தனது அலுவலக அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை செல்லூர் 50 அடி ரோட்டை சேர்ந்தவர் முத்துராஜா (42). இவருக்கு மீனாம்பிகை என்ற மனைவியும், ஆகாஷ் (10) என்ற மகன், தமிழ்காவியா (6) என்ற மகளும் உள்ளனர். வழக்கறிஞரான இவர், மாநகராட்சி 7-வது வார்டு அதிமுக கவுன்சிலராகவும், வட்ட செயலாளராகவும் இருந்தார். இவருடைய வார்டு கவுன்சிலர் அலுவலகம் இங்குள்ள விவேகானந்தர் தெருவில் உள்ளது. தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளதால் இந்த அலுவலகத்தை கடந்த 12-ம் தேதி பூட்டி, சாவியை மாநகராட்சி அதிகாரிகள் வாங்கிச் சென்றனர்.
ஆனால் மற்றொரு சாவியை கவுன்சிலர் வைத்திருந்தார். அடிக்கடி பின்புற கதவை திறந்து, அலுவலகத்திற்கு சென்று வந்துள்ளார். இதேபோன்று நேற்றும் அவர் அலுவலகத்திற்கு வந்தார். நேற்று மாலை வரை அவர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் வந்து பார்த்த போது அலுவலக அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தொங்கிய நிலையில் கவுன்சிலர் முத்துராஜா இறந்து கிடந்தார்.
இதையடுத்து அங்கு திரண்ட பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த மதுரை போலீஸ் துணை கமிஷனர் பாண்டி கங்காதர் மற்றும் செல்லூர் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே அலுவலகத்தில் அவர் எழுதி வைத்திருந்த கடிதம் போலீசாரிடம் சிக்கியது. அதில்,"உடல்நிலை பாதிக்கப்பட்டதால், தற்கொலை செய்து கொண்டேன். எனது குழந்தைகளை அம்மா ஜெயலலிதாதான் காப்பாற்ற வேண்டும். கவுன்சிலராக இருந்தாலும் நான் ஏழை. வாடகை வீட்டில்தான் குடியிருக்கிறேன்''என எழுதியிருந்தது. இந்த சம்பவம் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
மதுரையில் கடந்த வாரம் மாநகராட்சி 51-வது வார்டு அதிமுக கவுன்சிலர் விஜயராகவன் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்நிலையில் 7-வது வார்டு அதிமுக கவுன்சிலர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.