அதிமுகவில் 3 சிட்டிங் எம்.பி.க்களுக்கு மட்டும் சீட்.. 37 பேர் புதுமுகங்கள்!!
சென்னை: லோக்சபா தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர் பட்டியலில் தற்போதைய எம்.பிக்களில் மூன்று பேருக்கு மட்டும் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எஞ்சிய 37 பேரும் புதுமுகங்களாக களம் இறக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் அதிமுகவின் லோக்சபா தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்டார். இந்த வேட்பாளர் பட்டியலில் தற்போதைய எம்.பிக்களான கரூர் தம்பிதுரை, திருவள்ளூர் வேணுகோபால், திருச்சி குமார் ஆகிய மூவருக்கு மட்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
37 புது முகங்கள்
இதர 6 எம்.பிக்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. மேலும் ஜெயலலிதா இன்று அறிவித்த பட்டியலில் 37 பேர் புதுமுகங்கள். இந்த 37 புதுமுகங்களில் 15 பேர் வழக்கறிஞர்கள். 2 பேர் மருத்துவர்கள். 4 பேர் பெண்கள்.
8 முன்னாள் எம்.எல்.ஏக்கள்
அத்துடன் 8 முன்னாள் எம்.எல்.ஏக்களுக்கு லோக்சபா தேர்தலில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. திருத்தணி கோ. அரி (அரக்கோணம்), சுந்தரம் (நாமக்கல்) , சு.மு. பாரதிமோகனன் (மயிலாடுதுறை), டாக்டர் மு. கோபால் (நாகப்பட்டினம்), அன்வர்ராஜா (ராமநாதபுரம்), மா. சந்திரகாசி (சிதம்பரம்) ஆ. அருண்மொழிதேவன் (கடலூர்), ஆ.ஏ. ஓமலிங்கம் (புதுச்சேரி) ஆகிய முன்னாள் எம்.எல்.ஏக்கள் லோக்சபா வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் அன்வர்ராஜா, தமிழக அமைச்சராக இருந்தவர்.
8 வன்னியர்கள்
மேலும் 40 வேட்பாளர்களில் 8 பேர் வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர்கள். கடலூர் அருண்மொழித்தேவன், ஆரணி சேவல் ஏழுமலை, ஸ்ரீபெரும்புதூர் ராமச்சந்திரன், அரக்கோணம் ஹரி, சேலம் பன்னீர்செல்வம், மயிலாடுதுறை பாரதி மோகன், தருமபுரி மோகன், புதுச்சேரி ஓமலிங்கம் ஆகியோர் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
5வது முறையாக களமிறங்கும் தம்பிதுரை
கரூர் தம்பிதுரை இதுவரை 4 முறை எம்.பியாக இருந்துள்ளார். 5வது முறையாக லோக்சபா தேர்தலை எதிர்கொள்கிறார் தம்பிதுரை என்பது குறிப்பிடத்தக்கது.