"மின்வெட்டு இல்லாத" மாநிலமாக்கிய முதல்வர் ஜெ.க்கு நன்றி- அதிமுக செயற்குழுவில் தீர்மானம்!!
சென்னை: தமிழகத்தில் நிலவி வந்த மின்வெட்டைப் போக்கி மின்வெட்டு இல்லாத மாநிலமாக்கிய தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிப்பதாக அதிமுக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதிமுக செயற்குழுக் கூட்டம் சென்னையில் உள்ள அக்கட்சித் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட முதல்வரும் அதிமுக பொதுச்செயலருமான ஜெயலலிதாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் இந்த செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த செயற்குழுக் கூட்டத்தில் லோக்ச்பா தேர்தலில் அதிமுக வாங்கிய வாக்குகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
பின்னர் 9 தீர்மானங்கள் செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. மறைந்த 137 அதிமுகவினர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, அதிமுக அரசின் 3 ஆண்டுகால சாதனைக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதேபோல் லோக்சபா தேர்தல் வெற்றிக்காக முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாராட்டு தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஏழை, எளிய மக்களை பாதிக்கும் முடிவை மத்திய அரசு எடுக்கக் கூடாது என்றும் உலகம் போற்றும் அம்மா உணவகம் திட்டத்தை விரிவுபடுத்துவதற்கு நன்றி தெரிவித்தும் அதிமுக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதேபோல் அம்மா உப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியதற்கும் அதிமுக செயற்குழுவில் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் தமிழகத்தில் நிலவி வந்த மின்வெட்டை போக்கி மின்வெட்டு இல்லாத மாநிலமாக்கியதற்காக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்து ஒரு தீர்மானமும், முல்லைப் பெரியாறு, காவிரி விவகாரங்களில் கண்காணிப்புக் குழு அமைக்க நடவடிக்கை எடுத்த பிரதமருக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.