தினகரன் ஆதரவாளர்கள் டிஸ்மிஸ்- கட்சி தாவல் ஆரம்பம்? மீண்டும் உடைகிறது அதிமுக?
தினகரன் ஆதரவாளர்கள் நீக்கத்தைத் தொடர்ந்து அதிமுக மீண்டும் உடையக் கூடும் என தெரிகிறது.
சென்னை: அதிமுகவில் இருந்து தினகரன் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் 6 பேர் நீக்கப்பட்ட நிலையில் மீண்டும் அக்கட்சியில் அதகளம் தொடங்கிவிட்டது. எம்.பி. செங்குட்டுவனைப் போல ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணியில் இருந்து தினகரன் பக்கம் தாவும் படலம் தொடங்க இருப்பதால் அதிமுக மீண்டும் உடையக் கூடும் என்றே தெரிகிறது.
ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுகவில் அடுத்த தலைமை யார் என்ற சலசலப்பு எழுந்தது. சசிகலா முன்னிறுத்தப்பட்ட நிலையில் ஓபிஎஸ் தர்மயுத்தத்தை தொடங்கினார். இது ஜெயலலிதா மறைவுக்குப் பிந்தைய முதலாவது அதிமுக பிளவு.
சசிகலா சிறைக்குப் போக தினகரன் அதிமுகவில் தலையெடுத்தார். ஆனால் அவரும் சிறைக்குப் போக தினகரன் தனிமைப்படுத்தப்பட்டார். பின்னர் முதல்வர் எடப்பாடியார் தலைமையில் அதிமுகவில் ஒரு அணி உதயமானது, இது அதிமுகவின் 2-வது பிளவு.
தனியே தினகரன்
ஒருகட்டத்தில் ஓபிஎஸ்ஸும் ஈபிஎஸ்ஸும் இணைந்தனர். தினகரன் தலைமையில் ஒரு தனி ஆவர்த்தனம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அதிமுக சின்னம், கொடி, கட்சி அலுவலகம் இணைந்த ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணிக்கு போனது.
மீண்டும் சலசலப்பு
இதனிடையே ஆர்கே நகர் தேர்தலில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணியை தினகரன் தோற்கடித்துவிட்டார். இதனால் அதிமுகவில் மீண்டும் சலசலப்பு தொடங்கிவிட்டது. தினகரனை நேரில் சந்தித்து நேற்று வாழ்த்து தெரிவித்தார் எம்.பி. செங்குட்டுவன்.
எடப்பாடியார் எச்சரிக்கை
இந்த பிள்ளையார்சுழியைத் தொடர்ந்து இன்று தினகரன் தரப்பு 6 மாவட்ட செயலாளர்களை ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணி அதிரடியாக நீக்கியுள்ளது. அத்துடன் துரோகம் செய்தவர்கள் அனைவரையும் நீக்குவோம் எனவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதிமுக உடைகிறது?
செங்குட்டுவன் எம்.பி.யைப் போல அடுத்தடுத்து தினகரன் பக்கம் யாரும் தாவிவிடக் கூடாது என்பதற்கான எச்சரிக்கையாகவே இந்த டிஸ்மிஸ் நடவடிக்கை பார்க்கப்படுகிறது. ஆனால் ஆர்கே நகரில் வெற்றி பெற்ற வேகத்தில் இருக்கும் தினகரன் தரப்பு, ஓபிஎஸ்- ஈபிஎஸ் அணியை உடைக்கும் முயற்சிகளில் மும்முரமாகவே இறங்கக் கூடும். இதனால் அடுத்து வரும் நாட்களில் அதிமுக மீண்டும் உடைந்தது....இத்தனை எம்.எல்.ஏக்கள் தினகரனுக்கு ஆதரவு என்கிற சூழ்நிலை உருவாகலாம். அதேநேரத்தில் ஆர்கே நகர் வெற்றி மூலம் டெல்லியின் படு உக்கிரப்பார்வையில் சிக்கியிருப்பதால் தினகரன் தரப்பு அடக்கியே வாசிக்கவும் சாத்தியமிருக்கிறது எனவும் கூறப்படுகிறது.