கொல்லைப்புறமாக ஆட்சியை கைப்பற்ற நினைக்கிறார்கள்.. ஆட்சியை அசைக்க கூட முடியாது: முதல்வர் பேச்சு
சென்னை: அதிமுகவை பாதுகாக்க தொண்டர்கள் ஓரணியில் திரள வேண்டும் என்று காஞ்சிபுரம் மாவட்டம், வண்டலூரில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அழைப்புவிடுத்துள்ளார்.
நிகழ்ச்சியில், எம்ஜிஆர் அஞ்சல் தலையை முதல்வர் பழனிசாமி வெளியிட துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பெற்றுக்கொண்டார்.
துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் பங்கேற்ற இந்த விழாவில், தொண்டர்கள் மத்தியில் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது:
பகுத்தறிவு முளைத்தது ஈரோட்டில் என்றால் அது துளிர்விட்டு வளர்ந்தது காஞ்சிபுரத்தில்தான். தமிழனை சுயமாக சிந்திக்க வைத்த பெருமை பெரியாரையும், அண்ணாவையும் சேரும்.
சுயநலத்துக்காக அதிமுகவை கூறுபோட அனுமதிக்க முடியாது. ஜெயலலிதா வழியில் செல்லும் அதிமுக ஆட்சி மேலும் வலிமை அடையும்.
சிலர் கொல்லைப்புறமாக ஆட்சியை கைப்பற்ற நினைக்கிறார்கள் அது ஒருபோதும் நடக்காது. எந்த தியாகத்தையும் செய்ய நாங்கள் தயாராக உள்ளோம். எனவே இந்த ஆட்சியை யாரும் அசைக்க முடியாது. ஆட்சியையும், கட்சியையும் காக்க நாங்கள் ஒற்றுமையாக உள்ளோம். எந்த சக்தியாலும் எங்களை ஒடுக்க முடியாது. இவ்வாறு பேசிய பழனிச்சாமி, எம்ஜிஆர் ஆற்றிய சேவைகளை நினைவுகூர்ந்தார்.