அவமானப்படுத்துகிறார் அமைச்சர் மணிகண்டன்- முதல்வரை மிரள வைத்த 9 ஒ.செ.க்கள்!
அமைச்சர் மணிகண்டனுக்கு எதிராக ராமநாதபுரம் மாவட்ட ஒன்றிய செயலாளர்கள் முதல்வரிடம் புகார் அளித்துள்ளனர்.
Recommended Video
சென்னை: தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டனுக்கு எதிராக முதல்வரிடம் புகார் வாசித்திருக்கிறார்கள் ராமநாதபுரம் மாவட்டத்தின் ஒன்றிய செயலாளர்கள். ' மாவட்டத்துக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சசிகலா ஆதரவில்தான் பதவிக்கு வந்தார். கட்சிக்காரர்களை அவமரியாதை செய்கிறார்' என்றெல்லாம் புகார் மனுவில் தெரிவித்துள்ளனர்.
சட்டசபை தேர்தல் நேரத்தில் ராமநாதபுரம் தொகுதியின் அ.தி.மு.க வேட்பாளர் யார்?' என்ற விவாதம் எழுந்தபோது, மண்டபம் முனியசாமி உள்பட பலரது பெயர்கள் அடிபட்டன. ஆனால், தொகுதிக்கு எந்தவித அறிமுகமும் இல்லாத மணிகண்டன் வேட்பாளராக நியமிக்கப்பட்டார்.
மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளர் ஜவாஹிருல்லாவை எதிர்த்து வெற்றி பெற்றார் மணிகண்டன். சின்னம்மா குடும்பத்துக்கு மிகவும் வேண்டப்பட்டவர். சமூகரீதியான பலத்தை அடிப்படையாக வைத்து அவருக்கு சீட் கொடுத்துள்ளனர். இதற்கு முன்பு அவர் ராமநாதபுரம் மாவட்டத்துக்கு வந்தது இல்லை. எந்தவொரு பொதுக்கூட்டத்திலும் கலந்து கொண்டதில்லை' என்ற பொருமல் கட்சிக்காரர்கள் மத்தியில் எழுந்தது.
முதல்வரிடம் 9 பேர் புகார்
ஆனால், எதிர்ப்பாளர்களை எல்லாம் தன்வசப்படுத்திக் கொள்ளவும் அமைச்சர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. சட்டசபை தேர்தலில் சீட் கொடுத்ததற்கு எதிராக, கட்சி நிர்வாகிகளால் எதுவும் செய்ய முடியவில்லை. தினகரன் தனி அணியாகக் கிளம்பியபோது, மாவட்ட நிர்வாகிகள் பலரும் சசிகலா அணிக்குத் தாவிவிட்டனர். இந்நிலையில், அமைச்சர் மணிகண்டனுக்கு எதிராக மாவட்டத்தில் உள்ள 12 ஒன்றிய செயலாளர்களில் ஒன்பது பேர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் புகார் மனு அளித்துள்ளனர்.
அமைச்சர் மீதான புகார் என்ன?
அந்த மனுவில், ' ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைச்சர் வைத்ததுதான் சட்டமாக இருக்கிறது. அவரிடம் பரிந்துரைக் கடிதம் வாங்கச் செல்லும் கட்சித் தொண்டர்களை மதிப்பதில்லை. அவருடைய தந்தை முருகேசன்தான் அனைத்து அரசுப் பணிகளிலும் தலையிடுகிறார். கட்சிக்காரர்கள் எடுத்த அரசு ஒப்பந்தமாக இருந்தாலும் 30 சதவீதக் கமிஷன் கேட்கிறார்கள். இதனைத் தராவிட்டால், வேறு ஆட்களுக்குப் பணிகளை ஒதுக்கிவிடுகிறார்கள்.
ஆபாசமாக அர்ச்சிக்கும் அமைச்சர்
எதிர்த்துக் கேள்வி கேட்டால், அசிங்கமாக திட்டுகிறார். மாவட்டத்தில் உள்ள அதிகாரிகளால் நிம்மதியாக வேலை பார்க்க முடியவில்லை. இதனால், பொதுமக்கள் மத்தியிலும் ஆட்சிக்குக் கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது. இந்தநிலை நீடித்தால் சட்டசபை தேர்தலை நம்மால் எதிர்கொள்ள முடியாது. கட்சிக்காரர்களும் வேறு அணிக்கு மாறிவிடுவார்கள். கட்சி அழிவதை யாராலும் தடுக்க முடியாது' எனக் குறிப்பிட்டுள்ளனர்.
அமைச்சர் மிரட்டல்
இப்படியொரு புகார் கடிதம் ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிரடியைக் கிளப்பியிருக்கிறது. "சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று வந்த நாள்முதலாக, அவருக்கு எதிராக இருப்பவர்களையெல்லாம் ஒதுக்கும் வேலைகளைச் செய்து வருகிறார் அமைச்சர் மணிகண்டன். மருதுபாண்டியன் என்ற கட்சிக்காரர் அவரைப் பற்றிக் கார்டனுக்குப் புகார் அனுப்பினார். அந்தப் புகார் கடிதம் அமைச்சரின் கைக்கே வந்துவிட்டது. உடனே, மருதுபாண்டியனை நேரில் அழைத்து, ' எனக்கு எதிராக உன்னால் ஒன்னும் செய்ய முடியாது. தொலைத்துவிடுவேன்' என எச்சரித்து அனுப்பினார்.
தினகரன் தூண்டுதலால் புகார்
இதனால், அவரைப் பற்றி புகார் கொடுக்கவே பலரும் அஞ்சினர். தற்போது நிலைமை அப்படியில்லை. உள்ளாட்சித் தேர்தலில் கட்சி வெற்றி பெற வேண்டும் என்றால், கீழ்மட்ட நிர்வாகிகளின் ஒத்துழைப்பு அவசியம். அதைப் பற்றியெல்லாம் அமைச்சர் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. ' நம்முடைய ஆட்சி நடக்கிறது' என்ற எண்ணமே தொண்டர்களுக்கு இல்லாமல் போய்விட்டது. அந்தளவுக்கு அமைச்சரின் குடும்பம் ஆதிக்கம் செலுத்துகிறது. முதல்வர்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்கிறார் அ.தி.மு.க ஒன்றிய நிர்வாகி ஒருவர். ஆனால், அமைச்சர் மணிகண்டன் தரப்போ, " கட்சிக்காரர்கள் என்னிடம் நல்ல அணுகுமுறையில் உள்ளனர். அவர்களுக்குத் தேவையான அனைத்தையும் முகச்சுழிப்பு இல்லாமல் செய்து தருகிறேன். என்னுடைய பணிகளை மாவட்டத்தில் உள்ள உண்மையான தொண்டர்கள் அறிவார்கள். தினகரன் தரப்பினரின் தூண்டுதலால் சிலர் இவ்வாறு செயல்படுகின்றனர்" என்கின்றனர் இயல்பாக.