அமைச்சர்கள் vs எம்பிக்கள்.. அதிமுகவிற்குள் இப்படி ஒரு பிளவு!
சென்னை: பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா விவகாரத்தால் தமிழக அதிமுக முக்கிய பிரமுகர்கள் நடுவே பிளவு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
உயர்நீதிமன்றம் மற்றும் காவல்துறை குறித்து மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி எச்.ராஜா ஆவேசமாக கூச்சலிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.
இது தொடர்பாக காவல்துறையினர் 8 பிரிவுகளில் எச்.ராஜா மீது வழக்கு தொடர்ந்தனர். ஆனால் அவர் இதுவரை கைது செய்யப்படவில்லை.
அமைச்சர்கள் வேறு கருத்து
இது குறித்து அமைச்சர் பாண்டியராஜன் கருத்து கூறுகையில், மாணவி சோபியா விமானத்தில் வைத்து கோஷமிட்டது மோசமான செயல் எனவே அவர் கைது செய்யப்பட்டார். அதே நேரம் ராஜாவின் பேச்சு என்பது, சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தாது. எனவே அவரை கைது செய்ய தேவையில்லை என்று உறுதியாக தெரிவித்தார். அமைச்சர் செல்லூர் ராஜு உள்ளிட்டோரும் ராஜா மீது கடுமையான கருத்துக்களை கூறுவதைத் தவிர்த்து வருகிறார். ஆனால் இதற்கு நேர் எதிராக உள்ளது அதிமுக எம்பி அருண்மொழித்தேவன் மற்றும் ஹரி ஆகியோர் பேட்டிகள்.
அருண்மொழித்தேவன்
இருவருமே பேட்டியளித்தபோது ராஜாவை வறுத்து எடுத்து விட்டனர். அருண்மொழித்தேவன் பேசும்போது, ராஜா மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும், அவர் சிறையில் இருக்க வேண்டும் என்றும் கூறினார்.
உரிமை மீறல்
ஹரி கூறுகையில், நாடாளுமன்ற எம்பிக்களை, ஒருமையில் பேசியதற்காக ராஜா மீது உரிமை மீறல் பிரச்னை கொண்டுவரப்படும். சாதாரண சாரண இயக்க தேர்தலில் கூட வெற்றி பெற முடியாத, வக்கற்றவர், எச்.ராஜா என்று கடுமையாக சாடினார்.
இரு பிரிவு
இதன் மூலமாக எச்.ராஜா விவகாரத்தில், அதிமுக இரண்டாக பிளவுபட்டுள்ளது தெளிவாக தெரிகிறது. பாஜக ஆதரவு நிலைப்பாடு உள்ள அதிமுக நிர்வாகிகள் சிலரும், தமிழகத்தில் ராஜாவால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்று கவலை கொண்ட அதிமுகவினர் தனியாகவும் பிரிந்து செயல்படுவது தெளிவாக தெரிகிறது.