நாளை முதல் அதிமுக உறுப்பினர் சேர்க்கை: ஈபிஎஸ்- ஓபிஎஸ் இடையேயான 'யுத்தம்' தொடக்கம்!
அதிமுகவில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் புதுப்பித்தல் விண்ணப்பங்கள் நாளை முதல் வழங்கப்படுகின்றன.
சென்னை: அதிமுகவில் நாளை முதல் உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவங்கள் விநியோகிக்கப்படுகின்றன. இப்புதிய உறுப்பினர்கள் சேர்க்கையை முன்வைத்து அதிமுகவில் ஓபிஎஸ், ஈபிஎஸ் இடையேயான யுத்தம் தொடங்கியுள்ளது.
அதிமுக கட்சி பெயர், இரட்டை இலை சின்னம் ஆகியவை ஓபிஎஸ்- ஈபிஎஸ் அணிக்கே என தேர்தல் ஆணையம் தீர்ப்பளித்தது. இதையடுத்து அதிமுகவில் இருந்து தினகரனின் ஆதரவாளர்கள் சுமார் 2,000 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
அதிமுகவைப் பொறுத்தவரையில் தற்போது நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா என ஈபிஎஸ்-ஓபிஎஸ் தரப்பு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. ஆனால் ஏற்கனவே ஓபிஎஸ் அணியின் கேசி பழனிச்சாமி, அதிமுகவுக்கு பொதுச்செயலரை தேர்தல் மூலம் தேர்வு செய்ய கோரி கொடுத்த மனு தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் உள்ளது.
தற்காலிக ஏற்பாடுகள்
தேர்தல் ஆணைய விதிகளின்படி பொதுச்செயலாளர் பதவிதான் அதிகாரம் மிக்கது. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்- இணை ஒருங்கிணைப்பாளர் பதவி என்பது தற்காலிக ஏற்பாடுதான். அதனால் அதிமுகவில் நிச்சயம் பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் நடைபெற வேண்டிய நெருக்கடி உள்ளது.
பொதுச்செயலர் தேர்தல்
இந்நிலையில் அதிமுகவில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்கான படிவங்கள் வழங்குதல் மற்றும் பழைய உறுப்பினர்கள் புதுப்பித்தல் பணி நாளை தொடங்குகிறது. இதைத் தொடர்ந்து அதிமுக உட்கட்சி தேர்தல் நடைபெறும். அதிமுக பொதுச்செயலாளரை பொதுக்குழு உறுப்பினர்கள் மட்டுமின்றி அடிப்படை உறுப்பினர்களும் சேர்ந்து தேர்தல் மூலம் தேர்வு செய்ய வேண்டும் என்பது அக்கட்சியின் சிறப்பு விதி.
பொதுச்செயலர் பதவி யாருக்கு?
ஆகையால் கட்சி பொறுப்புகள் மற்றும் பொதுச்செயலாளர் பதவியைக் கைப்பற்றும் நோக்கத்தில் ஈபிஎஸ், ஓபிஎஸ் தரப்பு உறுப்பினர் சேர்க்கை மற்றும் புதுப்பித்தலில் மிக தீவிரம் காட்டும். பொதுச்செயலாளர் பதவியைக் கைப்பற்றும் தரப்பு வசமே ஆட்சியும் இருக்கும் என்பதால் இதில் இரு அணியினரும் மும்முரம் காட்டுகின்றனர்.
வெல்வது யாரோ?
உறுப்பினர் படிவ விநியோகத்தில் இருந்து அதிமுகவில் ஓபிஎஸ்- ஈபிஎஸ் இடையேயான உண்மையான அதிகாரத்துக்கான யுத்தம் தொடங்குகிறது. வெல்வது யார் என்பதும் அடுத்த தர்ம யுத்த நாயகன் யார் என்பதும் விரைவில் தெரிந்துவிடும்.