சாதிக்பாட்சா மரணம்: மீண்டும் விசாரிக்க மனு கொடுத்த அதிமுக வக்கீல்கள்- திமுகவிற்கு செக்?
சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் நண்பர் சாதிக்பாட்சாவின் மரணம் குறித்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று சிபிஐ மற்றும் சென்னை காவல் ஆணையரிடம் அதிமுக வழக்கறிஞர்கள் மனு கொடுத்துள்ளனர். இதன் மூலம் 5 வருடத்திற்கு முன்பு புதைக்கப்பட்ட சாதிக்பாட்சா வழக்கிற்கு மீண்டும் உயிரூட்ட அதிமுகவினர் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
சென்னை உயர் நீதிமன்ற அதிமுக வழக்கறிஞர்கள் பி.வி.செல்வக்குமார், எஸ்.திவாஹர், சி.திருகுமரன், ராம்சங்கர் ஆகியோர் சிபிஐ, அமலாக்கப் பிரிவு, சென்னை பெருநகர காவல் ஆணையர், தி.நகர் துணை ஆணையர் ஆகியோரிடம் ஒரு புகார் மனுவை கொடுத்துள்ளனர்.
புதைக்கப்பட்டு மண்ணோடு போனதாக கருதப்பட்ட சாதிக்பாட்சாவின் மரண வழக்கு உயிரூட்டுவதன் மூலம் திமுகவிற்கு செக் வைக்க அதிமுக முயற்சி செய்வதாக கூறப்படுகிறது.
பெரம்பலூரைச் சேர்ந்தவரான சாதிக் பாட்சா, சென்னை தியாகராய நகரில் கிரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் நிர்வாக இயக்குநராக இருந்து வந்தார். இவரது மனைவி ரஹானா பானு. இவர்களுக்கு அதின் என்ற மகனும், அசின் என்ற மகளும் உள்ளனர்.
இந்த நிறுவனத்தில் ஆ. ராசாவின் சகோதரர் ஆ. கலியபெருமாள், உறவினர் ஆர்.பி. பிரமேஷ்குமார் ஆகியோர் இயக்குநர்களாக உள்ளனர். கடந்த 2004ம் ஆண்டு ரூ. 1 லட்சம் முதலீட்டில் தொடங்கப்பட்ட கிரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் நிறுவனத்தின் வர்த்தகம் குறுகிய காலத்தில் ரூ. 600 கோடியைத் தாண்டியது.
ரூ. 1.76 லட்சம் கோடி அளவிலான 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கியுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசாவின் நெருங்கிய நண்பர் என்பதால், ஸ்பெக்ட்ரம் ஊழல் பணம் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டதா என சிபிஐ அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது.
இதன் அடிப்படையில், கடந்த 2010ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி டெல்லி, பெரம்பலூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள ஆ. ராசா மற்றும், அவரது உறவினரின் வீடுகள், வணிக நிறுவனங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள சாதிக் பாட்சாவின் வீட்டிலும் சோதனை நடந்தது.
2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்
2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் அப்போதைய மத்திய அமைச்சர் ஆ.ராசா மற்றும் திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி ஆகியோர் 2011ம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் துப்புத் துலக்க ஆ.ராசாவின் நண்பரும், கிரீன் ஹவுஸ் ப்ரோமோட்டர்ஸ் நிர்வாகியுமான சாதிக் பாட்சாவை 2 முறை டெல்லிக்கு அழைத்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
சாதிக் பாட்சா தற்கொலை
சிபிஐ அதிகாரிகள் மீண்டும் விசாரணைக்கு அழைக்க இருந்த நிலையில் அவர் 2011ம் ஆண்டு மார்ச் 17ம் தேதி தனது வீட்டில் தூக்கு போட்ட நிலையில் சடலமாக கிடந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. அவராக தற்கொலை செய்து கொண்டாரா ? அல்லது கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொள்ள தூண்டப்பட்டாரா என பல கேள்விகளை எழுப்பியது.
மனைவி புகார் மனு
சாதிக் பாட்சாவின் மனைவி ரஹானா பானு தேனாம்பேட்டை காவல் நிலையத்துக்கு வந்து, அன்றைய தினமே தனது கணவர் இறந்தது தொடர்பாக புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிபிஐ அதிகாரிகள் விசாரித்ததும், அந்த விவரங்கள் ஊடகங்களில் வெளியானதால் சாதிக் பாட்சா மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், அந்த அவமானம் தாங்காமலேயே அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறியிருந்தார் ரஹானா பானு.
யார் கொடுத்த நெருக்கடி
அதே நேரத்தில் 2 ஜி ஸ்பெக்டர் வழக்கில் எந்த உண்மையும் வெளிவரக்கூடாது என்ற நோக்கத்தில் திமுகவில் முக்கிய நபர்கள் கொடுத்த நெருக்கடியினால் சாதிக்பாட்சா தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியது.
கொலை செய்யப்பட்டாரா?
சாதிக்பாட்சா தற்கொலை செய்து கொண்டதாக உறுதியாக கூற முடியவில்லை. கழுத்து இறுக்கப்பட்டு அவர் மரணம் அடைந்துள்ளார் என அவரது உடலை பிரேத பரிசோதனை செய்த டாக்டர் டெக்கால் கூறிய கருத்துக்களும் பரபரப்பை ஏற்படுத்தின. சாதிக்பாட்சா கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று கூறப்பட்டது.
சிபிஐ விசாரணை
சாதிக்பாட்சா மரணம் குறித்து விசாரணை நடத்துவதற்காக டெல்லியில் இருந்து அகில இந்திய விஞ்ஞான மருத்துவ கழக தடயவியல் நிபுணர்கள், பிரேத பரிசோதனை அறிக்கையை ஆய்வு செய்து சாதிக்பாட்சா தற்கொலை செய்து கொண்டது உறுதியாக கூறினர். இதனையடுத்து விசாரணை நடத்திய சிபிஐ, அவரது மரணம் ஒரு தற்கொலை என கூறி முடித்துக்கொண்டது.
5ம் ஆண்டு நினைவுதினம்
கடந்த மார்ச் 15ம் தேதி பெரும்பாலான நாளிதழ்களில் சாதிக் பாட்சாவின் 5 வது நினைவு தினத்தை பற்றிய விளம்பரம் வெளியாகியிருந்தது. அந்த விளம்பரத்தில் 'செஞ்சோற்று கடன் தீர்க்க, சேராத இடம் சேர்ந்து, வஞ்சத்தில் வீழ்ந்தாயே.'என குறிப்பிடப்பட்டிருந்தது.
தோண்டும் அதிமுக
அப்போதே அதிமுக தரப்பில், சாதிக் பாட்சாவின் மரணம் குறித்து மீண்டும் விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு வலு சேர்க்கும் விதமாக திருச்சியில் கடந்த மாதம் செய்தியாளர் சந்திப்பு நடத்திய,அரியலூர் மாவட்டம், அய்யூரை சேர்ந்த பிரபாகரன் என்பவர் பேட்டி கொடுத்தார்.
கொலை செய்யப்பட்ட சாதிக் பாட்சா
தமிழர் நீதிக்கட்சியின் தலைவர் சுப.இளவரசனின் உதவியாளர் என்றும், ஆ.ராசாவின் மைத்துனர் பரமேஸ்குமார், முன்னாள் உளவுத்துறை அதிகாரி ஜாபர்சேட் ஆகியோருடன் சேர்ந்து சாதிக் பாட்சாவை கொலை செய்ததாகவும்' பிரபாகரன் அதிர்ச்சிகரமான தகவலை கூறினார். மேலும், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால், இந்த ரகசியத்தை தற்போது வெளியிடுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதிமுக வழக்கறிஞர்கள் மனு
கடந்த சில நாட்களாக இந்த வழக்கு தொடர்பாக அமைதி காக்கப்பட்டு வந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்ற அதிமுக வழக்கறிஞர்கள் பி.வி.செல்வக்குமார், எஸ்.திவாஹர், சி.திருகுமரன், ராம்சங்கர் ஆகியோர் சிபிஐ, அமலாக்கப் பிரிவு, சென்னை பெருநகர காவல் ஆணையர், தி.நகர் துணை ஆணையர் ஆகியோரிடம் ஒரு புகார் மனுவை அளித்தனர்.
மீண்டும் தோண்ட வேண்டும்
திருச்சி பிரஸ் கிளப்பில் கடந்த மாதம் 17ம் தேதி கே.பிரபாகரன் என்பவர் கொடுத்த பேட்டியில், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் நண்பர் சாதிக்பாட்சாவை டவலால் கழுத்தை நெரித்து நான்தான் கொன்றேன். ஆ.ராசாவின் உறவினர் பரமேஷ்குமாருடன் சேர்ந்து இந்த கொலையை செய்தேன். முன்னாள் உளவுப்பிரிவு அதிகாரி ஜாபர்சேட் இந்த கொலைக்கு உதவி செய்தார் என்று தெரிவித்துள்ளார். பிரபாகரன் கூறிய தகவலின் அடிப்படையில் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
அதிர்ச்சிக்குள்ளான திமுக
2ஜி வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடந்து வரும் நிலையில் திமுகவின் எதிர்காலத்தை பாதிக்கும்படியான பெரும் வழக்கில் அதிமுக ஆர்வம் காட்டுவதும் வழக்கை மீண்டும் விசாரிக்கக் கோருவதும் திமுக வட்டாரத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
தோண்டுவதால் பூதம் கிளம்புமா?
புதைக்கப்பட்ட சாதிக் பாட்சாவின் மரணவழக்கை மீண்டும் அதிமுக தோண்டுவதால் திமுக முகாமில் கிலி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மீண்டும் விசாரிப்பதன் மூலம் கிளம்பும் பூதம் யாருக்கு பாதகமாக அமையுமோ? எந்த புற்றிலிருந்து எந்த பாம்பு கிளம்புமோ?