கோட்டையில் வடசென்னை அதிமுக சீனியர்கள் கட்டிப் புரண்டு அடிதடி!
தினகரன் விவகாரத்தில் கோட்டையில் வடசென்னை அதிமுக சீனியர்கள் இருவர் கட்டிப்புரண்டு அடித்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: அதிமுக அக்கப்போரின் உச்சகட்டமாக கோட்டையில் 'தலை' முன்பே வடசென்னை அதிமுக சீனியர்கள் கட்டிப் புரண்டு அடித்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவில் தினகரன் தொடர்பாக எந்த ஒரு கருத்தையுமே 'தலை' சொல்வதே இல்லை. அவருக்கு பினாமி வாய்ஸ்தான் கொடுக்கப்பட்டு வருகிறது.
இதில் அதிகமாக வாய்ஸ் கொடுக்கும் வடசென்னைகாரர் மீது தினகரன் கோஷ்டி ஏகத்துக்கும் கடுப்பில் இருக்கிறது. மற்றொரு வடசென்னைகாரர் நீண்டகாலமாக அமைச்சர் பதவி கிடைக்கும் என இலவு காத்த கிளியாக இருக்கிறார்.
தலை முன்பு 'பொங்கல்'
அவர் இப்போது தினகரனுக்கு வாய்ஸ் கொடுத்து வருகிறார். இந்த வடசென்னைகாரர்கள்தான் கோட்டையில் தலை முன்பு ஒருவருக்கு ஒருவர் நேரே சந்திக்க நேரிட்டது. அமைச்சர் பதவி கிடைக்குமா? கிடைக்காதா? என விரக்தியில் இருக்கும் நபர் பொங்கி பாய்ந்துவிட்டாராம்.
உன் யோக்கியதை தெரியுமா?
'தினகரனைக் கட்சியைவிட்டு நீக்க நீ யார்? உனக்கு இந்தப் பதவியை யார் கொடுத்தது? தொகுதிக்குள் உன் குடும்பத்தோடு யோக்கியதை என்னன்னு எல்லோருக்கும் தெரியும். இனி தேவையில்லாமல் பேசினா, நிலைமை வேறு மாதிரி ஆயிடும் என எகிறியிருக்கிறார். வாங்கி கட்டியவரும் சும்மா இருந்துவிடுவாரா என்ன.. 'உன்னைப் பத்தி எனக்குத் தெரியாதா? உன் யோக்கியதையைச் சொல்லவா?' எனப் பதிலுக்கு எகிறி இருக்கிறார்.
கைகலப்பு அடிதடி
இந்த வார்த்தை மோதல் முற்றி கைகலப்பு அடிதடி என 'தலை' முன்பே அரங்கேறி இருக்கிறது. ஆனால் தலையோ 'என்னதான் நடக்கும் நடக்கட்டுமே' என அமைதி காத்தாராம்.
கூவத்தூர் பாயா சாட்சி
இந்த அடிதடிக்கு சாட்சியாக இருந்தவர் தென்சென்னைக்காரர்... கூவத்தூரில் காலையிலேயே பாயா கொடுத்து மட்டையாக்குகிறார்கள் என கலகல பேட்டி கொடுத்தவர் சத்தியவான் அவர்.