ஸ்டார் ஹோட்டலில் உட்கார்ந்து தேர்தல் அறிக்கையை தயாரித்த ஓ.பி.எஸ், அமைச்சர்கள்
சென்னை: அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் உட்பட 7 அமைச்சர்கள் சென்னை நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நேற்று ஆலோசனை நடத்தியுள்ளனர்.
தமிழகத்தில் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத சூழலில், அனைத்து கட்சிகளும் முன்கூட்டியே தேர்தலை எதிர்கொள்வதற்கான ஆயத்தப் பணிகளை முடுக்கி விட்டுள்ளன.
திமுக, அதிமுக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள், ஏற்கனவே தங்களது கட்சித் தொண்டர்களிடம் விருப்பமனுக்களைப் பெற்றுவிட்டது. பா.ஜ.க.வில் இன்று முதல் விருப்ப மனு பெறப்பட உள்ளது.
இது ஒருபுறம் இருக்க தேர்தல் அறிக்கையைத் தயாரிக்கும் பணியையும் கட்சிகள் தொடங்கியுள்ளன.
இந்த சூழ்நிலையில், அதிமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கான ஆலோசனைக்கூட்டம் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நேற்று நடைபெற்றது. அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதாவின் உத்தரவின் பேரில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்தியலிங்கம், பழனியப்பன், எடப்பாடி பழனிச்சாமி, ப.வளர்மதி, கோகுல இந்திரா மற்றும் அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் பண்ருட்டி ராமச்சந்திரன், முன்னாள் அமைச்சர் பொன்னையன், செம்மலை ஆகியோர் கலந்து கொண்டனர்.
நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை தலைமையில் நடந்த இந்த ஆலோசனை கூட்டம், மதியம் தொடங்கி இரவு வரை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் நிலவும் முக்கிய பிரச்சினைகள் குறித்தும், அதில் இடம்பெற வேண்டிய மக்களுக்கான நலத்திட்டங்கள், முக்கிய அம்சங்கள் குறித்து தேர்தல் அறிக்கையில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இந்த ஆலோசனைகள், ஜெயலலிதாவிடம் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் அவரின் வழிகாட்டுதலின்படி இறுதி வடிவம் பெறும் என கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்னும் சில தினங்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து அதிமுக தனது தேர்தல் அறிக்கையை வெளியிடும் எனக் கூறப்படுகிறது.