திண்டுக்கல்லில் அதிமுக பிரமுகர் ஓட ஓட வெட்டிக் கொலை... தாய், மகன் கண் முன் நடந்த கொடூரம்!
திண்டுக்கல்: திண்டுக்கல்லில், அ.தி.மு.க. பிரதிநிதி ஒருவர் பட்டப்பகலில் ஓட ஓட, விரட்டி வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வயதான தாயார், எட்டுவயது மகன்முன் நடந்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொல்லப்பட்ட நபரின் பெயர் செல்வமுருகன் என்பதாகும். இவர் திண்டுக்கல் செல்லாண்டி அம்மன் கோவில் தெருவில் வசித்து வருகிறார். 35, 10 வது வார்டு அ.தி.மு.க., பிரதிநிதியாகவும் இருந்து வருகிறார். இவர், சில மாதங்களுக்கு முன், பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். தற்போது, சமையல் பாத்திரங்களை வாடகை விட்டு வந்தார்.
திங்கட்கிழமையன்று மாலை, 4:15 மணியளவில், செல்வமுருகன் தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். எதிர் வீட்டில் வசிக்கும் செல்வக்குமார், 33, என்பவரும், மற்றொரு வாலிபரும், அ.தி.மு.க., பிரமுகர் வீட்டிற்குள் புகுந்து தகராறு செய்தனர். அப்போது, அரிவாளால் வெட்டியதில், செல்வமுருகனின் மணிக்கட்டு துண்டானது.
சுதாரித்த செல்வமுருகன், உயிர் பிழைக்க, தெருவில் ஓடினார். ஆனாலும் விடாமல் செல்வமுருகனை, இருவரும் விரட்டி, வெட்டினர். ரத்தவெள்ளத்தில் சாய்ந்த செல்வகுமார். சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவத்தை பார்த்த அப்பகுதியினர், மிரண்டு ஓட்டம் பிடித்தனர்.
தாய், மகன் கண்முன் நடந்த கொலை
செல்வமுருகனின் தாய் பார்வதி, அவரது எட்டுவயது மகன் செல்வசரத் ஆகியோர் முன்னிலையில் இந்த கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது. செல்வமுருகனின் சகோதரர் அங்குராஜ், நடக்க முடியாத மாற்றுத்திறனாளி. 'கண் முன்னால் நடந்த சம்பவத்தில், தம்பியை காப்பாற்ற, என்னால் எழுந்து ஓட முடியவில்லையே' என கதறினார்.
போலீஸ் விசாரணை
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து, டி.எஸ்.பி., ராமச்சந்திரன், பொது குழாயில் குடிநீர் பிடிப்பதில், தன் தாயுடன் ஏற்பட்ட தகராறால், கொலை செய்திருக்கலாம் என, முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறினார்.
ஜாமீனில் வந்து கொலை
கொலை செய்த செல்வக்குமார், கன்னிவாடி அருகே, கடந்த, 2012ல் நடந்த கொலை வழக்கில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர். இரு நாட்களுக்கு முன் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். எதற்காக கொலை நடந்தது என, விசாரித்து வருவதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.