எதிர்பார்ப்பில் அதிமுக பொதுக்குழு, செயற்குழு... கூட்டணியா, தனித்து போட்டியா.. டிச. 31ல் தெரியும்
சென்னை: அதிமுகவின் செயற்குழு, பொதுக்குழுக் கூட்டம் சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி-ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் டிசம்பர் 31ம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது. வழக்கமாக, சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் இந்தக் கூட்டம் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இடவசதி, போக்குவரத்து வசதி உள்ளிட்ட காரணங்களால் கூட்டம் திருவான்மியூருக்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்தக் கூட்டத்துக்கு அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் தலைமை தாங்குகிறார். பொதுக்குழு மற்றும் செயற்குழுவில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. இறுதியில், அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா சிறப்புறையாற்றுகிறார் என கூறப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில், அ.தி.மு.க.,வினர் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்ள உள்ளனர்.அனைவரும் காரில் வந்தால், டிசம்பர் 31ம் தேதி தென்சென்னை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இதை தவிர்க்க, செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டத்திற்கு வருவோர், காரில் வருவதை தவிர்க்கும்படி, கட்சி தலைமை உத்தர விட்டுள்ளது.
சட்டசபை தேர்தலுக்கு ஆயத்தம்
2016ஆம் ஆண்டுக்கான சட்டசபை தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளன. இந்த நிலையில், கூட உள்ள அதிமுக, பொதுக்குழு செயற்குழு கூட்டம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
முக்கிய அறிவிப்பு
அதிமுக தனித்துப் போட்டியிடுமா அல்லது கூட்டணி அமைத்து போட்டியிடுமா என்பது குறித்து கட்சியின் பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா நிகழ்த்தும் உரையிலிருந்து அறிய முடியும். கடந்த 2013ம் ஆண்டு நடைபெற்ற செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில்தான் லோக்சபா தேர்தலில் தனித்து போட்டியிடப்போவதாக அறிவித்தார் ஜெயலலிதா.
திருப்புமுனை கூட்டம்
தேமுதிக தலைவர் விஜயகாந்த்துடன் திமுக, பாஜக, மக்கள் நலக் கூட்டணி, காங்கிரஸ் என அரசியல் கட்சியினர் பலரும் கூட்டணி வைத்துக்கொள்ள ஆர்வத்துடன் அழைப்பு விடுத்துள்ளனர். இந்த மனநிலை அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டத்துக்குப் பிறகு மாறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
விருப்பமனு
செயற்குழு. பொதுக்குழு கூட்டத்திற்காக ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி-ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் பந்தல் போடும் வேளைகள் ஜரூராக நடைபெற்று வருகிறது. அதே நாளில் தேர்தலுக்குப் போட்டியிடுகிறவர்களிடம் இருந்து விருப்ப மனு வாங்கும் அறிவிப்பும் வெளியாகலாம் என்றும் அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சசிகலாவுக்கு முக்கியத்துவம்
அ.தி.மு.க., பொதுக்குழுக் கூட்டத்தில், முதல்வரின் தோழியான சசிகலாவுக்கு, கட்சியில் பதவி வழங்குவது தொடர்பான அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது.
மாறிய இடங்கள்
அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டங்கள் இதுவரை நியூ உட்லன்ஸ் ஹோட்டல், வடபழனி விஜய ஷேச மகால், எழும்பூர் ராஜா முத்தையா மன்றம், வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் திருமண மண்டபங்களில் கடந்த காலங்களில் நடைபெற்று உள்ளது. முதன் முறையாக திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி-ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.