பன்னீர்செல்வத்திற்கு ஃபெயில் மார்க் போட்ட வார இதழை மொத்தமாக வாங்கி பதுக்கிய ர.ரக்கள்
சென்னை: அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் எம்.எல்.ஏ செயல்பாட்டுக்கு ஃபெயில் மார்க் போட்ட வார இதழை மொத்தமாக வாங்கி சென்று மக்களிடம் சேராமல் தடுத்துள்ளனர் அதிமுகவினர்.
என்ன செய்தார் எம்.எல்.ஏ? என்ற பகுதியில், போடிநாயக்கனூர் தொகுதி எம்.எல்.ஏவும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பற்றி ஜூனியர் விகடன் கடந்த இதழில் செய்தி வெளியாகியிருந்தது.
நியூட்ரினோ திட்டம் உள்ளிட்ட பல விஷயங்களில் ஓ.பி.எஸ் மீது மக்கள் கோபத்தில் இருப்பதாக அந்த இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. ஓ.பி.எஸ் தம்பி ராஜாவின் அட்டகாசங்கள் அதிகரித்திருப்பது மக்களிடம் அதிருப்தியை சம்பாதித்திருப்பதாகவும் அந்த இதழில் செய்தி வெளியாகியிருந்தது. எம்.எல்.ஏவின் செயல்பாடு 100க்கு 29 மதிப்பெண் என கொடுக்கப்பட்டிருந்தது. அதாவது ஓ.பி.எஸ் ஃபெயில் ஆகிவிட்டார்.
இந்த செய்தி தகவல் கிடைத்ததும், ரத்தத்தின் ரத்தங்களும், ஓ.பி.எசுக்கு வேண்டப்பட்டவர்களும், தேனி மாவட்டத்தில் எங்குமே ஜூ.வி கிடைக்காத அளவுக்கு மொத்தமாக அள்ளி சென்றுவிட்டதாக கூறுகிறார்கள் அங்குள்ள செய்தியாளர்கள்.