அதிமுகவினர் போராட்டத்தை முதல்வர் தடுத்து நிறுத்த வேண்டும்: திருநாவுக்கரசர் வேண்டுகோள்
சென்னை: அதிமுகவினரின் போராட்டத்தை முதல்வர் ஜெயலலிதா தடுத்து நிறுத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் திருநாவுக்கரசர் கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று நிருபர்களுக்கு திருநாவுக்கரசர் அளித்த பேட்டியில் கூறியதாவது: காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், யாரையும் புண்படுத்தும் எண்ணத்தில் பேட்டியளிக்கவில்லை என்று கூறியுள்ளார். அவர் விளக்கம் கொடுத்த பிறகும், அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் அதிமுகவினர் போராட்டங்கள் நடத்துவது சரியில்லை.
காங்கிரஸ் அலுவலகங்கள் மீதும், காங்கிரஸ் கட்சியினர் மீதும் கொலைவெறி தாக்குதல் நடந்துவருகிறது. இளங்கோவன் தனது நிலைப்பாட்டை தெளிவாக கூறிய பிறகும், போராட்டம் தேவையற்றது.
மதுவிலக்கு போராட்டத்தை திசை திருப்பவே அதிமுக இந்த போராட்டங்களை நடத்திவருகிறது. முதல்வருக்கு தெரியாமல் இப்போராட்டங்கள் நடைபெற வாய்ப்பு இல்லை. சட்டம்-ஒழுங்கை காப்பாற்ற முதல்வர் முன்வர வேண்டும். இளங்கோவன் பேசியதை யாரோ திரித்து சொல்லி, போராட்டத்திற்கு பின்னணியில் உள்ளனர். தமிழகத்தில் அரசு நிர்வாகம் என்று ஒன்று உள்ளதா இல்லையா என்பதே தெரியவில்லை.
இவ்வாறு திருநாவுக்கரசர் கூறினார்.