சரிந்த ஜெயலலிதா போட்டோ.. பதறிய அதிமுகவினர்.. குற்றாலம் சாரல் விழாவில் பரபரப்பு
நெல்லை: அதிமுகவினர் போட்டி போட்டு ஜெயலலிதா படத்தை பிடிப்பதில் காட்டிய ஆர்வத்தால் அவரது படம் சரிந்தது.
தென்னகத்தின் ஸ்பா என்று பெருமையோடு அழைக்கப்படும் குற்றாலத்தில் இன்று முதல் ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை சாரல் திருவிழா நடைபெறுகிறது. இயற்கை அளித்த அற்புதமான சுற்றுலாத்தலம் குற்றாலம் ஆகும். இதமான காற்று, மெல்லிய சாரல், பசுமையான மலைப்பகுதி, உடலுக்கும், உள்ளத்திற்கும் புத்துணர்ச்சி அளிக்கும் மூலிகை மணம் நிறைந்த அருவிக்குளியல் என சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்த சுற்றுலாத்தலம் குற்றாலம்.
குற்றாலத்தில் நிலவும் இதமான சீசனை அனுபவிக்க ஆண்டுதோறும் ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை ஆண்டு தோறும் 50 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் குற்றாலம் வந்து செல்கின்றனர். சுற்றுலா பயணிகளை மகிழ்விப்பதற்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சாரல் திருவிழா நடத்தப்படுகிறது.இந்தாண்டு சாரல் திருவிழா இன்று 27ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட்3ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
விழா நடைபெறும் 8 நாளும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. குற்றாலம் கலைவாணர் அரங்கில் இன்று 27ஆம் தேதி மாலை 8.10 மணிக்கு தொடக்க விழா நடை பெற்றது.விழாவிற்கு மாவட்ட கலெக்டர் சந்திப் நந்தூரி தலைமை தாங்கி்னார்.சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி என். நடராஜன் ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் வி.எம். ராஜலட்சுமி, செய்தி, விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, முதன்மைச் செயலர் அபூர்வ வர்மா சுற்றுலாத் துறை ஆணையர் பழனிக்குமார் கலந்து கொண்டு சாரல் திருவிழாவை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.
மக்கள் பிரதிநிதிகள் இதில் பங்கேற்றனர். இரவு 10 மணி வரை பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த விழா வின் மேடை ஓரத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா படம் வைக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டது. சிறிது நேரத்தில் ஜெயலலிதா புகைப்படத்தை மேடையில்பிடிப்பதில் மும்முரம் காட்டிய அதிமுகவினர் தட்டிவிட்டதில் அவரது படம் சரிந்தது. உடனடியாக அதனை சிலர் தாங்கி பிடித்து மீண்டும் அதே இடத்தில் வைத்தனர்.
இதனை அமைச்சர்கள் கண்டுகொள்ள வில்லை.