வரலாம் வரலாம் வா... ஓபிஎஸ் அணியை நிபந்தனையின்றி பேச அழைக்கும் எடப்பாடி அணி
ஓபிஎஸ் அணியினர் பேச்சுவார்த்தைக்கு வரலாம் என்றும் நிபந்தனையின்றி பேச நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றும் எடப்பாடி பழனிச்சாமி அணியைச் சேர்ந்த வைத்திலிங்கம் கூறியுள்ளார்.
சென்னை: அதிமுகவின் ஒற்றுமைக்காக தங்கள் அணி பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக எடப்பாடி பழனிச்சாமி அணியைச் சேர்ந்த வைத்திலிங்கம் கூறியுள்ளார். எந்தவித நிபந்தனைகளும் இன்றி அமர்ந்து பேசினால் மட்டுமே தீர்வு கிடைக்கும் என்றும் ஓபிஎஸ் அணியினர் பேச வரவேண்டும் என்றும் அதிமுக தலைமை அலுவலகத்தில் பேசிய வைத்திலிங்கம் கூறியுள்ளார்.
பிரிந்துபோன இரு அணிகளையும் இணைக்க பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. இதற்காக ஓபிஎஸ் அணி சார்பிலும் எடப்பாடி பழனிசாமி அணி சார்பிலும் தனித்தனியாக இரு குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
குழுக்கள் தயார்
பன்னீர் குழுவில், முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தலைமையில், பொன்னையன், நத்தம் விஸ்வநாதன், மனோஜ் பாண்டியன், மைத்ரேயன், பாண்டியராஜன், ஜே.சி.டி.பிரபாகர் ஆகிய ஏழு பேர் குழுவில் உள்ளனர். எடப்பாடி குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் தலைமையில், செங்கோட்டையன், சி.வி.சண்முகம், திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார், தங்கமணி, வீரமணி ஆகிய ஏழு பேர் கொண்ட குழு உருவாக்கப்பட்டுள்ளது.
பேட்டி தட்டும் குழுவினர்
இரு அணியைச் சேர்ந்தவர்களும் மாறி மாறி பேட்டி கொடுப்பதால் பிரச்சினைகளும், சிக்கல்களும் ஏற்படுகின்றன. எடப்பாடி அணியைச் சேர்ந்த அமைச்சர் ஜெயக்குமார் பேட்டிக்கு உடனடியாக எதிர்வினை ஓபிஎஸ் அணியின் கே.பி முனுசாமியிடம் இருந்து வருகிறது.
ஜெயலலிதா மரணம்
இதனிடையே இன்று செய்தியாளர்களிடம் பேசிய கே பி முனுசாமி ஜெயலலிதா மர்ம மரணத்தை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த இரண்டு கோரிக்கைகளை நிறைவேற்றினால் எவ்வித கருத்து வேறுபாடு இன்று இரு அணிகளும் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று கூறினார்.
நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை
அதே நேரத்தில் அதிமுக தலைமை அலுவலகத்தில் பேசிய எம்.பி வைத்திலிங்கம், ஓபிஎஸ் அணியினர் எப்போது வேண்டுமானாலும் பேச வரலாம் என்றார். அமர்ந்து பேசினால் மட்டுமே கருத்தொற்றுமை ஏற்படும். பேச வரும் முன்பே நிபந்தனை விதிப்பது சரியாகாது என்றார். ஓபிஎஸ்தான் முதலில் பேச்சுவார்த்தைக்கு தயார் என்றார். அதனை தம்பித்துரை வரவேற்றார். இப்போது அவர்கள் மாறி மாறி பேசுகின்றனர் என்று கூறினார் வைத்திலிங்கம்.