ஓபிஎஸ் கோஷ்டிதான் ஓட்டை பானையில உப்பு வச்சு அடைக்க பாக்குறாங்க - ஜெயக்குமார் கிண்டல்
ஓபிஎஸ் அணியினர் ஓட்டை பானையில உப்பை வைத்து அடைக்கப் பார்க்கிறார்கள் என்று நிதியமைச்சர் ஜெயக்குமார் கிண்டலடித்துள்ளார்.
சென்னை: நாங்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்கிறோம். அவங்கதான் ஓட்டை பானையில உப்பை வைத்து அடைக்கப் பார்க்கிறாங்க என்று ஓபிஎஸ் அணியினரை கிண்டலடித்துள்ளார் நிதியமைச்சர் ஜெயக்குமார். கதவு திறந்தே இருக்கிறது, அவர்கள் எப்போது வேண்டுமானாலும் பேச்சுவார்த்தைக்கு வரலாம் என்றும் ஜெயக்குமார் அழைத்துள்ளார்.
அதிமுகவின் இரு கோஷ்டிகளும் இணையும் என்ற எதிர்பார்ப்பு முற்றிலும் தகர்ந்துவிட்ட நிலையில் இரு கோஷ்டிகளும் ஒருவரையொருவர் வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் தாக்கிப்பேசி வருகின்றனர்.
பேச்சுவார்த்தை நடத்த இரு அணிகளிலும் தலா 7 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது. பேச்சுவார்த்தை குறித்து இருதரப்பிலும் மாறி மாறி கருத்துக் கூறிவருவதால், இழுபறி ஏற்பட்டுள்ளது.
இருக்கமுடியுமா?
மேட்டூரில், ஒபிஎஸ் ஆதரவு தொண்டர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய எம்.எல்.ஏ செம்மலை ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் வருமான வரி சோதனைக்குள்ளான அமைச்சரும் வைகை அணையில் தெர்மகோல் போட்ட அமைச்சரும் பதவியில் இருக்க முடியுமா? என கேள்வி எழுப்பினார்.
எங்க பக்கம் வரத்தயார்
தற்போது 15 அமைச்சர்கள், 35 எம்.எல்.ஏ.க்கள் எங்கள் அணிக்குவர தயாராக உள்ளனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்று கூறிய செம்மலை, எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சியை கலைக்க வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு துளி அளவும் இல்லை என்றார்.
இது அர்த்தமற்ற பேச்சு
செம்மலை பேச்சு பதிலடி கொடுத்துள்ள செல்லூர் ராஜூ, செம்மலை அர்த்தமற்ற வகையில் பேசி வருகிறார் என்றார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்ற நாங்கள் அனைவரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நல்லாட்சி நடத்தி வருகிறோம்.
ஆன்மா மன்னிக்காது
ஜெயலலிதா அறிவித்த திட்டங்களை செயல்படுத்த கூடாது என்று ஓ.பி.எஸ். அணியினர் ஆட்சியை கவிழ்க்க நினைக்கிறார்கள். அது நடக்காது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் அரசு 5 ஆண்டுகளும் நீடிக்க கூடாது என நினைத்து இடையூறு ஏற்படுத்துபவர்களை ஜெயலலிதாவின் ஆன்மா மன்னிக்காது என்று கோபமாக கூறினார்.
ஜெயக்குமார் கிண்டல்
செம்மலையின் கருத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் இன்று பதிலடி கொடுத்துள்ளார். நாங்க ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம். அவங்கத்தான் ஓட்டை பானையில உப்பு வச்சு அடைக்கப் பார்க்கிறாங்க. அது முடியுமா? என்று கிண்டலாக கேட்டார். இப்பவும் கதவு திறந்துதான் இருக்கிறது, வேண்டுமானால் பேச வரலாம் என்றும் கூறியுள்ளார். எப்படியோ? இரு அணிகளின் இணைப்பு பேச்சுவார்த்தையை இப்படி பேசி பேசியே ஜவ்வு இழுப்பு இழுத்து வருகின்றனர் இரு கோஷ்டியினரும்.