அணிகள் இணைப்பா.. எங்களுக்கு தெரியாது.. ஒரே மாதிரி சொல்லும் ஓ.பி.எஸ் அணியினர்!
சென்னை: அதிமுக அணிகள் இணைப்பு நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், 4 மணி நேரத்திற்கும் மேலாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வீடுகளில் ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்றன.
அணிகள் இணைப்பு குறித்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தனது ஆதரவாளர்களுடன் தனது இல்லத்தில் ஆலோசனை நடத்தினார். இதேபோன்று முதல்வர் பழனிசாமி, முக்கிய அமைச்சர்களுடன் தனது கிரீன்வேஸ் இல்லத்தில் ஆலோசனை நடத்தினார்.
4 மணிநேரம் இப்படி நடைபெற்ற ஆலோசனை கூட்டம் இரவு 9.15 மணியளவில் நிறைவடைந்தது. இதன்பிறகு ஓ.பி.எஸ் இல்லத்தில் இருந்து வெளியேறிய அவர் ஆதரவு மூத்த நிர்வாகிகளான பி.ஹெச்.பாண்டியன், பொன்னையன், மதுசூதனன் ஆகியோர் ஒரே மாதிரி வார்த்தைகளைத்தான் கூறினர். அணிகள் இணைப்பு குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்றும், அதுகுறித்து பன்னீர்செல்வம்தான் முடிவெடுத்து அறிவிப்பார் எனவும் கூறி கலைந்து சென்றனர்.
பன்னீர்செல்வமும் இதுவரை எதுவும் தெரிவிக்காத நிலையில் அதிமுக தொண்டர்கள் இடையே பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.