அப்போ இன்னைக்கும் பேச்சுவார்த்தை இல்லையா? அதிமுக அணிகள் இணைவது எப்போ?
அதிமுகவின் இரு அணிகளும் இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக கூறப்பட்ட நிலையில் ஓபிஎஸ் அணியின் முனுசாமி பேட்டி பேச்சுவார்தையில் சுணக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: ஓபிஎஸ் - ஈபிஎஸ் அணிகளுக்கு இடையேயான அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை இன்று நடைபெற உள்ளதாக கூறப்பட்டதை அடுத்து அதிமுக தலைமை அலுவலகத்திற்கு அமைச்சர்கள் வரத் தொடங்கினர். நீண்ட நாட்களுக்குப் பிறகு அதிமுக தலைமை அலுவலகம் களைகட்டியுள்ளது. ஆனால் இன்று பேச்சுவார்த்தை நடைபெறுமா என்ற சந்தேகத்தை ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த கே.பி முனுசாமியின் பேட்டி ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரண்டு அணிகளாக பிளவுபட்ட அதிமுக இப்போது மீண்டும் இணைய உள்ளது. சசிகலா குடும்பம் ஓரம்கட்டப்பட்டதை அடுத்து இப்போது ஓபிஎஸ் - ஈபிஎஸ் அணிகள் அடுத்தடுத்து அணிகளை இணைக்கும் முயற்சிகளை செய்து வருகின்றன.
ஓபிஎஸ் நிபந்தனைகள்
சசிகலா குடும்பத்தினரை கட்சியை விட்டு வெளியேற்ற வேண்டும். ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும் ஆகிய இரு கோரிக்கைகளையும் ஏற்றால் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று ஓ.பி.எஸ். அணி சார்பில் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக இரு அணியைச் சேர்ந்த நிர்வாகிகளும் மாற்றி மாற்றி கருத்துக்களை தெரிவித்ததால் பேச்சுவார்த்தை தொடங்குவதில் இழுபறி ஏற்பட்டு வந்தது.
தினகரன் கைது
இதற்கிடையே தினகரன் கட்சியில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தார். மேலும் அவர் விசாரணைக்காக டெல்லி சென்ற போது கைது செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து அணிகளையும் இணைப்பதற்கான பேச்சுவார்த்தையை தொடங்குவதற்காக மும்முரம் காட்டினர்.
சசிகலா பேனர்கள் அகற்றம்
ஓ.பன்னீர்செல்வம் - முதல்வர் பழனிசாமி அணிகள் இடையே கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் இரு அணி தரப்பிலும் தலா 7 பேர் பேச்சுவார்த்தையில் பங்கேற்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. இதன் முன்னோட்டமாகவே சசிகலா பேனர்கள் அகற்றப்பட்டதாக கூறப்பட்டன. ஆனால் சசிகலாவின் பேனர்களை அகற்றியது எங்களின் சொந்த விருப்பம் என்று எடப்பாடி பழனிச்சாமி அணியைச் சேர்ந்த சி.வி. சண்முகம் கூறினார்.
நாங்க பேசுவோம்
இதனிடையே ஓபிஎஸ் அணியை சேர்ந்த முனுசாமியோ, எங்களின் எண்ணங்கள் அவர்களுக்குத் தெரியும், அதன்படி தற்போது நடக்கத் தொடங்கியுள்ளது. விரைவில் பேசுவோம் என்று கூறியுள்ளார். இன்று பேச்சுவார்த்தை நடக்கும் என்று நாங்கள் கூறவில்லை ஊடகங்கள்தான் கூறி வருகின்றன என்றார்.
பேசியது என்ன?
இரு அணிகளிடையே நேற்று இரவு ரகசிய பேச்சுவார்த்தை நடைபெற்றது என்று அமைச்சர் சிவி சண்முகம் கூறினார். எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் செங்கோட்டையன், வைத்தியலிங்கமும், ஓ.பி.எஸ். தரப்பில் முனுசாமி, விஸ்வநாதனும் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.. தனியார் ஓட்டலில் நள்ளிரவு 1 மணி வரை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
என்னதான் பேசினார்கள்
டிடிவி தினகரன் கைதுக்குப் பிறகு கட்சி யார் கட்டுப்பாட்டில் உள்ளது என்றே தெரியவில்லை. இந்த சூழ்நிலையில்தான் இரு அணிகளைச் சேர்ந்த இன்னாள், முன்னாள் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இன்று அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடைபெறும் என்று கூறப்பட்டது.
அமைச்சர்கள் வருகை
இன்று காலையில் இருந்தே அதிமுக தலைமை அலுவலகம் களைகட்டியது. அமைச்சர்களும் ராகுகாலத்திற்கு முன்பே அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்தனர்.
ஆனால் இப்போது முனுசாமி பேசியதைப் பார்த்தால் இன்று பேச்சுவார்த்தை நடக்குமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.
குழுவினர் யார் யார்?
எடப்பாடி பழனிசாமி அணி சார்பில் வைத்திலிங்கம் தலைமையில் செங்கோட்டையன், எஸ்.பி. வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம், ஜெயக்குமார் உள்ளிட்ட 7 பேர் கொண்ட குழுவும், ஓ.பி.எஸ். அணி சார்பில் கே.பி.முனுசாமி தலைமையில் நத்தம் விசுவநாதன், மைத்ரேயன், பாண்டியராஜன், ஜே.சி.டி. பிரபாகரன் உள்ளிட்ட 7 பேர் கொண்ட குழுவும் பேச்சு வார்த்தையில் ஈடுபடுகிறார்கள். இன்று அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது என்றே கூறப்படுகிறது.