சைக்கிளில் ஆய்வு செய்ய வந்த கிரண் பேடி.. கறுப்புக் கொடியுடன் திரண்ட அதிமுகவினர்.. எம்எல்ஏ கைது
புதுச்சேரி முத்தியால் பேட்டை மார்கெட் பகுதிக்கு ஆய்வுக்கு வந்த துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எம்எல்ஏ கறுப்புக்கொடி காட்டியதால் பதற்றம் ஏற்பட்டது.
புதுச்சேரி: துணைநிலை ஆளுநர் கிரண்பேடி வார இறுதி நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பல்வேறு பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இன்று முத்தியால் பேட்டை மார்கெட் பகுதிக்கு ஆய்வுக்கு சென்றபோது எம்எல்ஏ உள்ளிட்ட 200 பேர் கறுப்புக்கொடி காட்டியதால் பதற்றம் ஏற்பட்டது.
சமீப காலமாக ஆளுநர் கிரண்பேடி ஆய்வு செய்யும் இடங்களில் அவருக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்துகிறார்கள். அரசு திட்டங்களை நிறைவேற்ற விடாமல் முட்டுக் கட்டையாக இருப்பதாக கூறி அவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இன்று காலை முத்தியால் பேட்டையில் புதிதாககட்டப்பட்டுள்ள மார்க்கெட் கட்டிட வளாகத்தை பார்வையிட செல்வதாக ஆளுநர் அறிவித்திருந்தார். இதையறிந்த தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. வையாபுரிமணிகண்டன் தனது ஆதரவாளர்களுடன் அதிகாலையிலேயே மார்க்கெட் அருகில் ஒன்று கூடினார்.
அப்போது காலை 7.25 மணிக்கு கவர்னர் கிரண்பேடி சைக்கிள் மூலம் முத்தியால்பேட்டை மார்க்கெட்டுக்கு வந்தார். அப்போது வையாபுரி மணிகண்டன் எம்.எல்.ஏ. தலைமையில் கூடியிருந்த அ.தி.மு.க. தொகுதி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஆளுநருக்கு எதிராக கறுப்பு கொடி காட்டி முழக்கமிட்டனர்.
தொகுதியில் நடைபெற இருந்த திட்டங்களை தடுத்து நிறுத்தியதாக அவர்கள் ஆளுநருக்கு எதிராக கோஷம் எழுப்பினர். தொகுதிக்குள் வராதே, திரும்பிப்போ, திரும்பிப்போ என பதாகைகளை காட்டினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து அறிந்ததும் போலீஸ் சூப்பிரண்டு வேங்கடசாமி தலைமையிலான போலீசார் விரைந்து வந்து எம்.எல். ஏ.வையும், அவரது ஆதரவாளர்களையும் அங்கிருந்து கலைந்துபோகும் படி கூறினர்.
அதற்கு வையாபுரி மணிகண்டன் எம்.எல்.ஏ. எனது தொகுதியில் குடிநீர் தரமற்றதாக உள்ளது. இதை ஆளுநர் அருந்துவாரா? என கேட்க வேண்டும். கொண்டுவந்துள்ள குடிநீர் பாட்டிலை ஆளுநரிடம் அளிக்க அனுமதிக்க வேண்டும் என்றார். அதற்கு எஸ்.பி அனுமதி அளிக்க மறுத்து விட்டார்.
இதனால் வையாபுரி மணிகண்டன் எம்.எல்.ஏ. மார்க்கெட் வாசலில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டார். இதையடுத்து அவரை போலீசார் அவரை குண்டுக்கட்டாக தூக்கி அப்புறப்படுத்த முயன்றனர். மார்க்கெட் வளாகத்திற்கு வந்த ஆளுநர் முன்வாசலில் எம்.எல்.ஏ. மறியலில் ஈடுபட்டதால் அவரை கடந்து சென்று மற்றொரு வாசல் வழியாக மார்க் கெட்டுக்குள் சென்றார்.
இதையடுத்து போலீசார் வையாபுரிமணிகண்டன் எம்.எல்.ஏ. மற்றும் அவரது ஆதரவாளர்களை பிடித்து இழுத்தனர். இதனால் போலீசாருக்கும், எம்.எல்.ஏ. ஆதரவாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. எம்எல்ஏவின் சட்டையைப்பிடித்து இழுத்து தூக்கி தர தர வென இழுத்துச்சென்றனர். ஆதரவாளர்களையும் குண்டுக்கட்டாக இழுத்து சென்று கைது செய்தனர். வையாபுரிமணிகண்டன் எம்.எல்.ஏ. உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு வேனில் ஏற்றிச்சென்றனர்.