கொரோனா கொடூரமானது...போலீசுக்கு ஒத்துழைப்பு தாங்க.. ஊர் ஊராக மைக் பிடித்து அட்வைஸ் செய்த எம்.எல்.ஏ.
வேடசந்தூர்: கொரோனா தொற்று நோயால் அதிகம் பாதிக்கப்பட்ட கேரளாவில் இருந்து ஊர் திரும்பியவர்களை எதிரிகளைப் போல பார்க்கக் கூடாது; லாக்டவுன் காலத்தில் போலீசாருக்கு முழுமையான ஒத்துழைப்பு தர வேண்டும் என்று தொகுதி முழுவதும் மைக் பிடித்து வேண்டுகோள் விடுத்து வருகிறார் வேடசந்தூர் எம்.எல்.ஏ. வி.பி.பி. பரமசிவம்.
Recommended Video
கொரோனாவை கட்டுப்படுத்த 21 நாள் லாக்டவுனை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் இதுபோல முடக்கப்படுவது முதல் முறை என்பதால் இதன் தாக்கம் குறித்து மக்களுக்கு போதுமான விழிப்புணர்வு ஏற்படவில்லை.
லாக்டவுனில் ஊர் எப்படி இருக்கும்? தெரு எப்படி இருக்கும்? என ஊர் சுற்றிப் பார்க்க ஏராளமானோர் இருசக்கர வாகனங்களை எடுத்துக் கொண்டு கிளம்பி விடுகின்றனர். இதனால் லாக்டவுனின் நோக்கமே அடிபட்டுப் போகிறது.
இப்படியானவர்களை கட்டுப்படுத்துவதற்குள் போலீஸ் பாடு பெரும்பாடாகிவிடுகிறது. பல இடங்களில் போலீசார் கடும் நடவடிக்கை எடுத்த போதும் அவையும் விமர்சனத்துக்குள்ளாக்கியுள்ளது. சில இடங்களில் போலீஸ் உயர் அதிகாரிகளே மைக் பிடித்து கடுமையாக எச்சரித்த சம்பவங்களும் நடந்து உள்ளன.
கொரோனா: எல்லையில் பரிதவிப்பு... நள்ளிரவில் முதல்வருக்கு போன்.. சட்டென மீட்கப்பட்ட கேரளா பெண்கள்
இந்த நிலையில் வேடசந்தூர் சட்டசபை தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. பரமசிவம் தமது வாகனத்தில் மைக் கட்டிக் கொண்டு தொகுதியில் உள்ள கிராமங்கள் தோறும் சென்று கொரோனாவின் தாக்கம், லாக்டவுன் நோக்கம் குறித்தும் போலீசாருக்கு ஒத்துழைப்பது குறித்தும் விளக்கி வருகிறார். வேடசந்தூர் பகுதியில், கேரளாவுக்கு கூலி தொழிலாளர்களாக சென்று திரும்பியவர்கள் அதிகம்.
ஆகையால் கேரளாவில் இருந்து திரும்பியவர்களை எதிரிபோல் பார்க்காமல் சக மனிதர்களாக உறவினர்களாக நடத்தவேண்டும்; எப்படி சமூக இடைவெளியை கடைபிடிப்பது என விளக்கம் கொடுத்தார். மேலும் வெளியில் ஊர் சுற்றுகிறவர்கள் உறவினர்களாக இருந்தாலும் போலீசார் நடவடிக்கை எடுக்கத்தான் செய்வார்கள் என சொந்த பந்தங்களிடம் கூடுதல் எச்சரிக்கையும் விடுத்து விட்டு வலம் வருகிறார் எம்.எல்.ஏ. பரமசிவம்.