சட்டசபை கூட்ட இடைவெளியில், நன்றி சொல்ல தொகுதிக்கு ஓடிவந்த அதிமுக எம்எல்ஏ
மதுரை: சட்டசபை கூட்டம் நடைபெறும் நிலையில், நடுவே தொகுதிக்கு ஓடிச் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளார் மானாமதுரை அ.தி.மு.க வேட்பாளர் மாரியப்பன் கென்னடி.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலின்போது, மானாமதுரை தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் மாரியப்பன் கென்னடி 14,889 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
தி.மு.க. வேட்பாளர் சித்ரா செல்வி 75,004 வாக்குகள் பெற்ற நிலையில், மாரியப்பன்கென்னடி 89,893 ஓட்டுக்கள் பெற்றார்.
இந்த வெற்றியையொட்டி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து திறந்த ஜீப்பில் தொகுதியில் வலம் வந்து கொண்டுள்ளார் மாரியப்பன் கென்னடி.
உங்களில் ஒருவனாக இருந்து உங்களின் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றுவேன் என்று அவர் மக்களிடம் கூறினார். ஜெயித்த உடன் தொகுதியை மறந்துவிடும் மக்கள் பிரதிநிதிகளுக்கு மத்தியில், சட்டசபை நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட்டுள்ள இந்த இடைவேளையிலும், சென்னையில் இருந்து தனது தொகுதிக்கு வந்து மக்களுக்கு நன்றி சொல்லிக்கொண்டிருக்கும் மாரியப்பன் கென்னடியை மக்கள் ஆச்சரியத்தோடு பார்க்கிறார்கள்.