அதிமுக எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பரோலில் வந்த சசிகலாவிடம் ரகசியமாக பேசினர்.. திவாகரன் திடுக் தகவல்
Recommended Video
சென்னை: அதிமுக எம்.பி., எம்ல்ஏக்கள் பலரும் சசிகலாவிடம் ரகசியமாக தொடர்பு கொண்டு பேசியதாக அவரின் சகோதரர் திவாகரன் தெரிவித்தார்.
கணவர் நடராஜன் மரணத்தையடுத்து, 15 நாள் பரோலில், மார்ச் 20ம் தேதி, பெங்களூர் சிறையில் இருந்து வெளியே வந்தார், சசிகலா. தஞ்சையில், நடராஜன் இறுதி சடங்கில் பங்கேற்ற சசிகலா, வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்தார்.
அப்போது திவாகரன் உள்ளிட்ட அவரது உறவினர்கள் வீட்டில் வந்து சந்தித்து பேசினர்.
சசிகலா புறப்பட்டார்
இந்த நிலையில், பரோல் காலம் முடிந்த நிலையில், இன்று காலை தஞ்சையில் இருந்து சசிகலா பெங்களூர் புறப்பட்டார். இதன்பிறகு நிருபர்களிடம் திவாகரன் கூறியதாவது: சசிகலாவுக்கு 10 நாட்கள்தான் பரோல் வழங்கப்பட்டுள்ளது. பயண நாட்கள் கழிக்கப்பட்டு 10 நாட்கள்தான் பரோல் வழங்கப்பட்டுள்ளது. சசிகலா கேட்டது 15 நாட்கள், ஆனால் பரோல் வழங்கியது 10 நாட்களுக்குத்தான்.
நேரு வருகை ஏன்
கே.என்.நேரு, நடராஜனின் நெருங்கிய நண்பர். இறுதி சடங்கு அன்று நேரு இங்கு வரமுடியவில்லை என்பதால், இன்று நேரு வந்திருந்தார். அதில் அரசியல் முக்கியத்துவம் இல்லை. எங்கள் குடும்பத்தார் எல்லோரும் ஒற்றுமையாகத்தான் உள்ளோம். குடும்ப சண்டைக்காக சசிகலா முன்கூட்டியே கிளம்பிவிட்டதாக வெளியான தகவலில் உண்மையில்லை.
குக்கர் உள்ளது
இது போராட்ட களம், எங்களால் ஒதுங்க முடியாது. கட்சி சிக்கலில் உள்ளது. அதை சரி செய்ய வேண்டும் என்பதற்காக நாங்கள் ஒவ்வொருவரும் பங்களிப்பை அளித்து வருகிறோம். குக்கர் சின்னத்திற்கு, கோர்ட் தடை விதிக்கவில்லை. தப்பாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரகசிய பேச்சு
ஆளும் கட்சி எம்பி, எம்எல்ஏக்கள், சசிகலாவிடம் மறைமுகமாக பேசி ஆதரவு தெரிவித்தனர். நடராஜன் மரணத்திற்கு வருத்தம் தெரிவித்தனர். வெளிப்படையாக வரவில்லை. எல்லோரும் பதவியில் உள்ளார்கள் அல்லவா, பதவியை இழக்க யாருக்கும் விருப்பம் இல்லை எனவேதான் நேரடியாக வரவில்லை.