சட்டசபை தேர்தலுக்கு வியூகம்... எம்.ஜி.ஆர் பிறந்தநாளில் ஜெ. முக்கிய அறிவிப்பு
சென்னை: சட்டசபை தேர்லுக்கு சில மாதங்களே இருப்பதால் ஆளும்கட்சியாக இருக்கும் அதிமுக மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமரவேண்டுமே என்று முழு முனைப்புடன் தயாராகிவருகிறது. தேர்தலில் போட்டியிட விரும்புவர்களின் விருப்ப மனுக்கள் விற்பனை பற்றிய அறிவிப்பு ஜனவரி 20ம் தேதி வெளியாகும் என்று அதிமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆளும்கட்சியை வீழ்த்த எதிர்கட்சியினர் கூட்டணி பேச்சுவார்த்தைகள், வியூகங்கள் என விறுவிறுப்படைந்துள்ளது தேர்தல் களம். நமக்கு நாமே என்று ஸ்டாலின் கிளம்ப, மக்கள் பணி என்று விஜயகாந்த் மாவட்டந்தோறும் மக்களை சந்திக்க, மக்கள் நலக்கூட்டணியினரின் சுறுசுறுப்பும் ஜெயலலிதாவை யோசிக்க வைத்துள்ளது.
கண்ணுக்கு எட்டிய தூரம்வரை எதிரிகளை களத்தில் காணோம் என்று கடந்த 2014ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சொன்னார் ஜெயலலிதா. அதே ஆண்டு செப்டம்பர் மாதம் சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு, சிறைவாசம், அதன்பின்னர் கிடைத்த விடுதலை, தற்போது உச்சநீதிமன்றத்தில் நடைபெற உள்ள அப்பீல் வழக்கு அவரை சற்றே யோசிக்க வைத்திருக்கிறது.
அதனால்தான் 2015 பொதுக்குழுவில் பேசிய ஜெயரலிதா, தேர்தல் கூட்டணி பற்றி அப்போதைய சூழலுக்கு ஏற்ப முடிவெடுப்போம் என்று கூறி கூட்டணிக்கு தயார் என்று சூசகமாக சிக்னல் காட்டியிருக்கிறார்.
பிரச்சாரம் தொடக்கம்
முகநூலில் முத்திரை வார்த்தைகளால் பிரச்சாரத்தை சைலண்டாக தொடங்கிவிட்டார் கருணாநிதி. 'நமக்கு நாமே விடியல் மீட்பு'என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் கிளம்பினாலும்... மக்கள் பணி என்று தேமுதிகவின் விஜயகாந்த் மாவட்ட வாரியாக நலத்திட்டங்கள் வழங்கினாலும், வைகோ, விசிக, கம்யூனிஸ்ட்கள் எல்லோரும் இணைந்து மக்கள் நலக்கூட்டணி அமைத்தாலும் ஆளுங்கட்சியினர் அசராமல் தேர்தலுக்கு தயாராகிவிட்டனர்.
5 ஆண்டுகால சாதனைகள்
ஆளும் அதிமுகவினர் 5 ஆண்டுகால சாதனைகள் விளக்கி! கடந்த 6ம் தேதியில் இருந்து மாவட்டவாரியாக பேரணிகளை நடத்தி வருகின்றனர். 5 ஆண்டுகால சாதனைகளை விளக்கும் துண்டு பிரசுரங்களுடன் பூத் ஏஜன்ட்களும்; கட்சியின் முக்கிய பிரமுகர்களும் வீடு வீடாக சென்று, மக்களை சந்தித்து பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
வேட்பாளர்கள் தேர்வு
234 தொகுதிகளிலும், போட்டியிடக்கூடிய வேட்பாளர்களை தேர்வு செய்ய, தனிக்குழு ஒன்றை ஏற்படுத்தி, அந்த குழுவை, மாவட்டம் தோறும் அதிமுக தலைமை அனுப்பி உள்ளதாக அக்கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த குழு, தொகுதிவாரியாக மூன்று நபர்களை பட்டியலிட்டு, கட்சி மேலிடத்துக்கு வழங்க உள்ளது. இதற்கு இணையாக, உளவுத் துறையினரும், தொகுதி தோறும் மூன்று பேர் அடங்கிய பட்டியல் தயார் செய்து வருகின்றனராம்.
மாவட்ட செயலாளர்கள் பட்டியல்
அ.தி.மு.க.,வின் ஐவர் அணி வழிகாட்டுதலின் பேரில், மாவட்ட செயலர்கள் மூலமும் தொகுதிக்கு, 3 பேர் கொண்ட பட்டியல் கேட்டு வாங்கப்பட்டு வருகிறது. இந்த மூன்று பட்டியல்களில் இருந்து தொகுதிதோறும் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட உள்ளது.
விருப்பமனு
சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து விருப்ப மனு பெறவும், கட்சித் தலைமை முடிவு செய்துள்ளது. இதற்காக, வரும் 20ம் தேதியில் இருந்து, கட்சித் தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுக்களை கொடுக்கலாம் என, அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெ.நேர்காணல்
விருப்ப மனு கொடுத்திருப்பவர்களில் இருந்து, மூன்று தரப்பு பட்டியலில் இடம் பெறும் மூவர் கொண்ட பட்டியல் இறுதி செய்யப்பட்டு, அவை கட்சியின் பொது செயலர் ஜெயலலிதாவின் பார்வைக்கு வைக்கப்படும். இந்த பட்டியலில் இடம் பெறும் நபர்களை நேர்காணலுக்கு அழைத்து, அவர்களுடன் பேசி, இறுதி பட்டியல் தயார் செய்யப்பட்டு, வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
எம்.ஜி.ஆர் பிறந்தநாள்
அதிமுகவின் நிறுவனர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 99வது பிறந்த நாள் வரும் 17ம் தேதி, வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதற்கான விழாவை, கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அந்நாளில் கட்சி அலுவலகம் வந்து கொடியேற்றும் ஜெயலலிதா, இனிப்பு வழங்கி, ஆண்டு விழா மலரை வெளியிட உள்ளார்.
ஜெயலலிதா அறிவிப்பு
அதே நேரத்தில் 234 தொகுதிகளிலும் போட்டியிட விரும்பும் அ.தி.மு.க.,வினர், கட்சி தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு கொடுக்கலாம் என்ற அறிவிப்பை வெளியிடுவார் என்றும் அதிமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.