சகலகலா சண்டாளனே.. கடுப்பில், கமலை கண்டபடி விமர்சனம் செய்யும் 'நமது எம்.ஜி.ஆர்'
"சகலகலா சண்டாளனே.." என்ற தலைப்பில், கமலை கண்டபடி விமர்சனம் செய்துள்ளது 'நமது எம்.ஜி.ஆர்' நாளிதழ். அதிமுகவை கமல் எதிர்ப்பதால் இவ்வாறு விமர்சனம் செய்துள்ளார்.
சென்னை: அதிமுக கட்சியின், நமது எம்.ஜி.ஆர் நாளிதழில், சித்திரகுப்தன் என்ற பெயரில் அதிமுக கட்சியையோ, அக்கட்சியினரை எதிர்ப்போரையோ மோசமான வகையில் விமர்சனம் செய்வது வழக்கம்.
ஜல்லிக்கட்டு போராட்டம் தொடங்கி, நடிகர் கமல்ஹாசன் டிவிட்டரில், தமிழக அரசுக்கு எதிராக தொடர்ந்து கருத்துக்களை கூறி வருகிறார். தேசிய ஊடகங்களும் அவரை தொடர்பு கொண்டு கருத்து கேட்கின்றன. இதனால் கோபமடைந்துள்ளது அதிமுக தரப்பு. எம்.எல்.ஏக்களுக்கு எதிராக மக்களை தூண்டிவிடுவதாக போலீசில் புகார் ஒன்று பதியப்பட்டுள்ளது.
இந்நிலையில், நமது எம்ஜிஆர் சித்திரகுப்தன் பகுதியில், இன்று, சகலகலா சண்டாளனே என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ளதாவது:
டுவிட்டரில் நித்தம் புலம்பும் துஷ்டனே!
மகளின் எதிர்காலம் கருதியே விலகுகிறேன் என கவுதமியும் தப்பி ஓடிவிட,
அடுத்ததாக அஷ்டமி-நவமியாவது அகப்படுமா என காத்துக் கிடக்கும் கடுப்பில்
கழகத்திடம் எரிந்துவிழும் காதல் கிழவரசனே! காமக்கொடூரனே!
இவ்வாறு கவிதை பாணியில் அந்த விமர்சனம் மிக நீளமாக நீள்கிறது. உலக நாயகன் என அழைக்கப்படும், கமலை உளறல் நாயகன் என்று வர்ணித்து கார்ட்டூனும் அதில் போடப்பட்டுள்ளது.
சகலகலா சண்டாளனே.. கடுப்பில், கமலை கண்டபடி விமர்சனம் செய்யும் 'நமது எம்.ஜி.ஆர்' https://t.co/bwPoLTvxyX .@ikamalhaasan #KamalHaasan pic.twitter.com/EewL7GJT1h
— Oneindia Tamil (@thatsTamil) February 23, 2017
கமல்ஹாசன் படத்தின் தோல்விகளை இதில் சுட்டிக் காட்டி விமர்சனம் எழுதப்பட்டுள்ளது. திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்டோருக்கு எதிராக எழுதி வந்த சித்திரகுப்தன் பகுதியில், கமல்ஹாசனை விமர்சனம் செய்ய ஆரம்பித்துள்ளது, அக்கட்சியின் படுவேகமான வீழ்ச்சியை காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
மக்களின் கருத்தை எடுத்துக் கூறும் கமலை அதிமுக எதிர்ப்பது பொதுமக்கள் மத்தியில் அக்கட்சிக்கு எதிரானதாகவே திரும்பும் என்பதை அக்கட்சியினர் புரிந்து கொள்ளும் திறமை இல்லாமல் இருப்பதாகவும் அரசியல் நோக்கர்கள் குறிப்பிடுகிறார்கள்.