நாக்-அவுட் அதிமுக.. நாக்கு தள்ளும் எதிர்க்கட்சிகள்! இரு கோடுகள் வியூகத்தை உடைக்க யார் ரெடி?
சென்னை: எதிர்க்கட்சிகள் ஒவ்வொன்றையும் குறிவைத்து திக்குமுக்காட செய்துவரும் அதிமுகவின் வியூகங்களால் தேர்தல் களம் பரபரப்பாகியுள்ளது.
லோக்சபா தேர்தலில் பெற்ற பிரமாண்ட வெற்றியால், சட்டசபை தேர்தலை முன்கூட்டியே நடத்திவிடலாமா என்று யோசிக்கும் அளவுக்கு ஜெயலலிதா சென்றிருந்ததாக தகவல் உண்டு. ஆனால், ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற பிறகு, நிலைமை மாறியது.
இதன்பிறகு வெள்ளம் உட்பட பல்வேறு பிரச்சினைகள் அதிமுகவுக்கு காலை சுற்றிய பாம்பாக மாறின. இதனால், தேர்தலை சற்று சீரியசாக எதிர்கொள்ள ஆயத்தமாகியுள்ளனர், ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவினர்.
அதிமுக இம்முறை வகுத்துள்ள தேர்தல் வியூகம், வித்தியாசமானது என்கிறது கள நிலவரம். தங்கள் கட்சிக்கு எதிராக 5 வருட கால ஆட்சியின் எதிர்ப்பு அலை இருக்கும் என்பதை உணர்ந்து, எதிர்க்கட்சிகளை பலவீனமாக்கும் வியூகத்தை கையிலெடுத்துள்ளதாம் அதிமுக.
இருகோடுகள் வியூகம்
என்னதால் உழைத்தாலும், 5 வருடம் ஆட்சி நடத்திய பிறகு எழும் அதிர்ப்பு அலையை ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் குறைக்க முடியாது என்ற நிதர்சனத்தை அதிமுக உணர்ந்துள்ளது. இதனால், கோட்டை அழிக்காமல், பக்கத்தில் ஒரு பெரிய கோட்டை வரைந்து, தங்களை மேம்படுத்தும் 'இருகோடுகள்' டெக்னிக்கை அக்கட்சி கையிலெடுத்துள்ளது.
முதல் குறி திமுகவுக்கு
முதல்கட்டமாக திமுகவை பலவீனப்படுத்த களமிறங்கியதன் விளைவுதான், அக்கட்சியோடு இதுவரை பெரிய கட்சிகள் கூட்டணிக்கு நெருங்கிப்போகாமல் இருப்பதற்கான காரணம். அதிலும், தேமுதிகவை திமுகவோடு நெருங்க விடக்கூடாது என்பதில் ஆளும் கட்சி வரிந்து கட்டி வேலை செய்கிறதாம்.
உளவுத்துறை கைவரிசை?
இதன் ஒருபகுதியாகத்தான், பாஜக, பாமக, தேமுதிக இணைந்து கூட்டணியை உறுதி செய்துவிட்டன என்று உளவுத்துறை மூலம், பத்திரிகைகளுக்கு தகவல் அனுப்பி வைத்துள்ளது ஆளும் தரப்பு என்கிறார்கள் விவரம் அறிந்தோர்.
வன்னியர்கள்
அதிமுகவின் அடுத்த குறி பாமக. ராமதாஸ் கட்சியின் பலமான வன்னியர்களை, அவருக்கு எதிராகவே திருப்பிவிடும் வேலையை தொடங்கிவிட்டதாம் ஆளும் தரப்பு. இதற்காக, பாமகவிலிருந்து பிரிந்து சென்று தமிழர் வாழ்வுரிமை கட்சி என்ற பெயரில் கட்சி நடத்தும், வேல்முருகனை, அதிமுக தலைமை சந்தித்து பேசியதாக தகவல் உள்ளது.
ராமதாசுக்கு செக்
மேலும், படையாச்சி பேரவை என்ற பெயரில் 16 வன்னிய ஜாதி அமைப்புகளை ஒருங்கிணைத்து, பாமகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய அதிமுக தூண்டிவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுகதான் வன்னியர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது, பாமக, சுயநலமாக வன்னியர் வாக்குகளை பெறுகிறது என்றெல்லாம் பிரச்சாரம் செய்வது, இந்த கூட்டமைப்பின் வேலையாம்.
வைகோ கூட்டணி
அதேபோல மக்கள் நல கூட்டணியை உடைத்து, அதிமுக பக்கம் இழுக்கவும் ஆயத்தம் நடக்கிறது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.எல்.ஏக்களுக்கு மக்கள் நல கூட்டணியில் தொடர விருப்பம் இல்லையாம். அவர்களை கொண்டு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை தங்கள் பக்கம் இழுக்க ஆளும் தரப்பு திட்டமிடுகிறதாம்.
விடுதலை சிறுத்தைகள் குரல்
மதுரையில் மக்கள் நல கூட்டணி மாநாட்டுக்கு கூடிய கூட்டத்தை பார்த்து வந்த ஆசையால், திருமாவளவனை மக்கள் நல கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று, விடுதலை சிறுத்தைகளில் சில நிர்வாகிகள் குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.
பரப்பும் உளவுத்துறை
இந்த குரலை ஊதி பெரிதாக்கும் வேலையை, உளவுத்துறை செய்துவருகிறதாம். வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்களில், இக்கருத்தை அதிவேகமாக பரப்பிவருவதும் உளவுத்துறைதான் என்று, உளவுத்துறை வட்டாரங்களே தெரிவிக்கின்றன.
வாசனை வளைக்க திட்டம்
ஜி.கே.வாசன் தரப்பையும், தங்கள் பக்கத்திலேயே வைத்திருந்த அதிமுக முடிவு செய்துள்ளது. ஆனால் அவரோ 30 சீட்டுகளுக்கு மேல் தருபவர்களுடன்தான் கூட்டணி என்பதில் உறுதியாக இருக்கிறார். அதிமுக தரப்பில் அதிகபட்சமாக 12 தொகுதிகள் வரை பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வியூகத்தை உடைப்பாரா?
அதிமுகவின் செயல்பாடுகளுக்கு பக்கபலமாக உளவுத்துறை செயல்படுவதால், திமுக தரப்பு திக்குமுக்காடிப்போயுள்ளது. இந்த சூறாவளி தாக்குதல்களை எதிர்கொள்ள கருணாநிதி தக்க நேரத்தில் ஏதேனும் தடுப்பு திட்டத்தோடு வருவார் என நம்புகின்றனர் ரத்தத்தின் ரத்தங்கள்.