ஆளுநர் சொல்வதை போல நடந்தால், அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்கள் கதி அதோ கதிதான்!
சென்னை: இப்போதுள்ள சூழ்நிலையில் சட்டசபையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட முடியாது என ஆளுநர் கூறியுள்ள நிலையில், அவர் அதற்காக கூறிய காரணம் விவாதப்பொருளாகியுள்ளது.
திருமாவளவன், ஜவாஹிருல்லா, முத்தரசன் போன்ற எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் இன்று ஆளுநரை சந்தித்து, தமிழக சட்டசபையை கூட்ட உத்தரவிட்டு, பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினர்.
ஆனால், சட்டசபையை கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட முடியாது என ஆளுநர் கூறிவிட்டதாக பின்னர் வெளியே வந்த திருமாவளவன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஒரே கட்சி
19 எம்எல்ஏக்களும் இப்போதும் அதிமுகவில் இருப்பதாகவும், அவர்கள் அதிமுகவைவிட்டு வெளியேறினால் அவர்கள் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்றும் ஆளுநர் தெரிவித்ததாக திருமாவளவன் கூறினார். தினகரன் அணி எம்எல்ஏக்களும் அதிமுகவை சேர்ந்தவர்கள் என்பதால் தன்னால் அதில் தலையிட முடியாது என்பதுதான் ஆளுநரின் கருத்தாம்.
நம்பிக்கை வாக்கெடுப்பு இல்லை
நம்பிக்கை வாக்கெடுப்புக்கு ஆளுநர் உத்தரவிடப்போவதில்லை என்பது இதன் மூலம் உறுதியாகியுள்ளது. ஆளுநர் கூறும் காரணம் ஏற்புடையது இல்லை என்று முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா போன்ற சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். ஒருவேளை, அதிமுகவை சேர்ந்த அதிருப்தி எம்எல்ஏக்கள் 19 பேரும் ஆளுநர் கூற்றுப்படி வேறு கட்சிக்கு தாவினால், கட்சி தாவல் தடை சட்டத்தில் அவர்கள் பதவி பறிக்கப்படும். பிறகு நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால் எடப்பாடி அரசு எளிதாக வென்றுவிடும். இது தினகரன் தரப்புக்கு பெரும் அடியாகிவிடும்.
சபாநாயகருக்கு நெருக்கடி
அதேநேரம், அதிருப்தியாளர்களை சபாநாயகர் தகுதிநீக்கம் செய்துவிட்டு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டால், கர்நாடகாவில் எடியூரப்பா அரசு பற்றிய உச்சநீதிமன்ற தீர்ப்பை முன் உதாரணமாக காண்பித்து தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தப்பிவிடுவார்கள். ஏனெனில் சபாநாயகர் இவ்வாறு அவசரமாக எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்துவிட்டு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கூடாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
எம்எல்ஏக்கள் நிலை
எனவே இப்போது தினகரன் தரப்புக்கு ஜனாதிபதியை அணுகுவதுதான் ஒரே தீர்வாக இருக்க முடியும். அங்கும் இவர்கள் எதிர்பார்க்கும் தீர்வு கிடைக்காவிட்டால், நீதிமன்றத்தை அணுக அவர்கள் யோசிக்க கூடும் என்று தெரிகிறது. ஆனால் ஆளுநர் கூறிய காரணத்தினால் கட்சியிலிருந்து வெளியேறினால் அவர்கள் பதவி பறிக்கப்படுவது நிச்சயமாகிவிடும்.