லோக்சபா தேர்தலுக்கு 2012ம் ஆண்டே பணியை தொடங்கிய ஜெ... மதுரையில் வென்று சாதனை
சென்னை: 16வது லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் 39 தொகுதிகளில் 37 தொகுதியை வென்று இந்திய அரசியல்வாதிகள் அனைவரையும் தன்பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார் ஜெயலலிதா.
இந்த வெற்றி சும்மா கிடைத்துவிடவில்லை. கடந்த இரண்டாண்டு காலமாக அதிமுகவினர் ஆற்றிய களப்பணிதான் கைமேல் பலனைக் கொடுத்திருக்கிறது என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
நாடாளுமன்றத்தேர்தல் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்று எதிர்பார்த்து 2012ம் ஆண்டே அதற்கான பணியை தொடங்கிவிட்டது அதிமுக.
தேர்தல் பிரிவு பணிகள்
அதிமுகவின் தேர்தல் பிரிவு சார்பில் முதல் பூத் கமிட்டிக்கூட்டம் 2013ம் ஆண்டு ஜனவரியிலே போடப்பட்டுவிட்டது. அமைச்சர்கள் தங்களின் துறை சார்ந்த பணியாற்றினார்களோ இல்லையே அப்போது முதலே ஊர் ஊராகப் போய் கூட்டத்தைக்கூட்டி எம்.பி தேர்தலுக்கு கட்சியினரை தயார்படுத்தினர்.
தனித்துப் போட்டிமுடிவு
லோக்சபா தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது என்ற முடிவினை 2013ம் ஆண்டிலேயே எடுத்துவிட்ட ஜெயலலிதா அதற்கேற்ப காய் நகர்த்தி வெற்றியும் பெற்றுவிட்டார்.
புதிய வாக்காளர்கள் சேர்ப்பு
கடந்த 8 மாதங்களுக்கு முன்பாகவே வாக்காளர்கள் சேர்ப்புப் பணியில் அதிமுகவினர் பம்பரமாக சுழன்றனராம். ஆனால் திமுகவினர் இதில் பத்து சதவிகிதம் கூட ஆர்வம் காட்டவில்லை என்கின்றனர்.
சேர்க்கவேண்டியதை சேர்த்த அதிமுக
அதிமுக சார்பில் மாதம் ஒருமுறை பூத்கமிட்டிக்கூடி பேசியதும், ஆயிரம் ஓட்டுக்களுக்குப் பத்துபேர் என்று பிரித்து அவர்களை தனியாக கவனித்து பார்க்க வேண்டியவர்களைப் பார்த்தும், சேர்க்க வேண்டியதைச் சேர்த்தும் வாக்காளர்களைக் கவர்ந்தனர்.
விசுவாசமும் நம்பிக்கையும்
அதிமுகவினர் இப்படி அசுரவேகத்தில் பணியாற்றக் காரணம்,தலைமை மீதுள்ள விசுவாச பயம், தவிர என்றாவது ஒருநாள் எம்.எல்.ஏ, அமைச்சர், எம்.பி கனவு நனவாகும் என்ற நம்பிக்கையும்தானாம். அதிமுகவில் மட்டுமே சாமானியர்கள் அமைச்சர்களாவது சாத்தியம் என்கின்றனர் அரசியல்நோக்கர்கள்.
மதுரையில் சாதனை
இதேவேளையில் மதுரை தொகுதியினை முதன்முறையாக அதிமுக வென்று சாதனை படைத்திருக்கிறது. மதுரை தொகுதியில் முதன் முதலில் 1952ல் தேர்தல் நடந்தது. அப்போது மதுரை நாடாளுமன்ற தொகுதி இரட்டை உறுப்பினர் தொகுதியாக இருந்தது. அந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. முதன் முறையாக நடைபெற்ற தேர்தலில் கம்யூனிஸ்ட் சார்பில் களம் கண்ட தங்கமணி தோல்வி அடைந்தார்.
காங்கிரஸ் - கம்யூனிஸ்ட்
1957 ல் நடைபெற்ற தேர்தலில் கம்யூனிஸ்ட் தலைவர் கே.டி.கே.தங்கமணி வெற்றி பெற்று காங்கிரசை தோற்கடித்தார்.
தொடர்ந்து காங்கிரஸ், கம்யூனிஸ்ட் என்று மாறி மாறி வென்ற மதுரை லோக்சபா தொகுதியில், 1989ல் திமுக களம் இறங்கியது ஆனால் தோல்வியடைந்தது.
சுப்ரமணியசுவாமி வெற்றி
1998ல் நடைபெற்ற தேர்தலில் ஜனதா தளம் சுப்பிரமணிசுவாமி, த.மா.கா.வில் ராம்பாபு, மார்க்சிஸ்ட் மோகன் ஆகியோர் போட்டியிட்டு சுப்பிரமணியசுவாமி வெற்றி பெற்றார்.
திமுகவின் அழகிரி
1999, 2004 தேர்தல்களில் மார்க்சிஸ்ட் கட்சியின் மோகன் தொடர்ந்து வெற்றி பெற்று எம்.பியாக தேர்வானார். 2009 தேர்தலில் திமுகவில் மு.க.அழகிரி, மார்க்சிஸ்ட்கட்சியின் மோகனை தோற்கடித்தார். முதன்முறையாக கடந்த தேர்தலில் திமுக வென்றது.
வென்ற அதிமுக
மதுரை தொகுதியில் 2004 தேர்தலுக்கு பிறகு 2வது முறையாக போட்டியிட்ட அதிமுக தற்போது வெற்றி பெற்றுள்ளது. ஐந்து முனை போட்டியில் அதிமுக வெற்றி பெற்று, கோபாலகிருஷ்ணன் எம்பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.