நாடாளுமன்றத் தேர்தல்.. டிசம்பர் 19ல் அதிமுக செயற்குழு, பொதுக் குழு
சென்னை: லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் அ.தி.மு.கவின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் வரும் 19ந் தேதி சென்னையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அ.தி.மு.க பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வருகிற 19.12.2013 அன்று பிற்பகல் 3 மணிக்கு, சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில், அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெறும்.
அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும். உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழோடு தவறாமல் வருகை தந்து, கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டத்தில், நாடாளுமன்ற தேர்தலை எதிர் கொள்வது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. இதன் அடிப்படையில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.