அதிமுக - காங்கிரஸ் உறவு இயற்கையானது தான்.. தமாகா ஞானதேசிகன் அதிரடி!
சென்னை: அதிமுக, காங்கிரஸ் உறவு இயற்கையானது என்று தமிழ் மாநில காங்கிரஸ் துணைத் தலைவர் பி.எஸ். ஞானதேசிகன் தெரிவித்தார்.
நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியில் நெறியாளர் மு.குணசேகரன் நடத்தும் காலத்தின் குரல் விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோது இப்படித் தெரிவித்தார் ஞானதேசிகன்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆளூர் ஷா நவாஸ், பத்திரிக்கையாளர் ஸ்ருதிசாகர் யாமுனன், தமாகா மூத்த தலைவர் பி.எஸ். ஞானதேசிகன் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின்-திருநாவுக்கரசர், வைகோ-திருமாவளவன் முரண்படும் நிலைப்பாடுகள் கூட்டணியில் விரிசலா? என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு ஞானதேசிகன் வைத்த கருத்துக்கள்.
மத்திய அரசில் அங்கம் வகித்ததால் திமுகவுடன் கடந்த 10 ஆண்டு காலமாக காங்கிரஸ் கூட்டணி வைத்திருந்தது. அவர்கள் ஆதரவு தேவைபட்டதால் கூட்டணி தொடர்ந்தது. அதேசமயம் திமுகவுடன் காங்கிரஸ் தொடர்ந்து கூட்டணி வைத்தது கிடையாது. அதிமுகவுடன் காங்கிரஸ் பலமுறை நெருக்கமாக இருந்துள்ளது. உணர்வு பூர்வமான ஒற்றுமை காங்கிரசுக்கும், அதிமுகவுக்கும் இருந்துள்ளது.
மாநிலங்களவை தேர்தலில் தேமுதிக சார்பில் ராஜ்யசபா வேட்பாளர் நிறுத்தப்பட்டார். அதேசமயம் திமுக சார்பில் கனிமொழி வேட்பாளராக நிறுத்தப்பட்டபோது, அவர்கள் (திமுக) முதலில் எங்களிடம் ஆதரவு கேட்கவில்லை. அப்போது சோனியா காந்தி தேமுதிக வேட்பாளருக்கு ஆதரவு அளிக்கும்படி கூறினார். திமுக மூத்த தலைவர்கள் எங்களிடம் கடைசி நேரத்தில் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் அன்றைக்கு முடிவு மாற்றப்பட்டது.
தற்போது பொறுப்பு முதல்வர் வேண்டும் என ஸ்டாலின் கூறியுள்ளது குறித்து திருநாவுக்கரசர் முரண்பட்டு கூறியுள்ளது குறித்து ஞானதேசிகன் கூறுகையில், சட்டமன்ற தேர்தலின் போது சீட் ஒதுக்கீடு குறித்து திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தும்போது கசப்பான உணர்வுகளை உருவாக்குவார்கள். ஆனால் இந்த முறை உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மிக குறைவான இடங்களே ஒதுக்கியுள்ளனர். இதனால் காங்கிரஸ் கட்சி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதன் வெளிப்பாடக் கூட திருநாவுக்கரசர் அவ்வாறு கருத்து தெரிவித்திருக்கலாம்.
முதல்வர் உடல்நலம் குறித்து ஞானதேசிகன் பேசுகையில், அரசுப்பணிகளில் எந்த வித தொய்வும் இல்லை. எடுக்கப்பட வேண்டிய முடிவுகளில் எந்த காலதாமதமும் இல்லை அரசியல் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு சிலர் தங்களது விஷமதனத்தை காட்ட துணிந்துள்ளனர். தற்போது தமிழகத்திற்கு இடைக்கால முதல்வர் என்பது குழப்பத்தை தான் விளைவிக்கும் என்றார் ஞானதேசிகன்.
முழுமையான விவாதம்: