அதிமுக மகளிர் அணியின் பிரமாண்ட ''அம்மா கேக்'', ஆடலுடன் பாடல்!!
சென்னை: சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அதிமுக மகளிர் அணியினர் கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடினர்.
சர்வதேச மகளிர் தினம் ஆண்டுதோறும் மார்ச் மாதம் 8ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.
இதனையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களை அனைத்து மகளிருக்கும் தெரிவித்தனர்.
அதிமுக மகளிர் அணி...
இந்நிலையில், இன்று சென்னையில் அதிமுக மகளிர் அணி சர்வதேச மகளிர் தினவிழாவை கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடினர்.
அமைச்சர்கள் பங்கேற்பு...
இந்த நிகழ்ச்சியில் அதிமுக மகளிர் அணிச் செயலாளரும், அமைச்சருமான கோகுல இந்திரா, மகளிரணி மாநில துணைச் செயலாளர் நடிகை சி.ஆர்.சரஸ்வதி, அமைச்சர் வளர்மதி, அதிமுக மகளிர் அணி நிர்வாகிகள் மற்றும் அக்கட்சியைச் சேர்ந்த பெண்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பிரமாண்ட "அம்மா" கேக்...
அம்மா என எழுதப்பட்ட மிகப்பெரிய கேக் இந்த நிகழ்ச்சியின் போது வெட்டப்பட்டது. பின்னர் அது அங்கிருந்த பெண்களுக்கு பகிர்ந்து சாப்பிட அளிக்கப்பட்டது.
ஆடலுடன் பாடல்...
இந்தக் கொண்டாட்டத்தில் பங்கேற்ற பெண்கள் ஆடிப்பாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
வாழ்த்து...
இது தொடர்பாக அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவிகித இடஒதுக்கீட்டை சட்டமாக்கித் தந்துள்ள அதிமுக பொதுச்செயலாளர், முதல்வர் ஜெயலலிதா, சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, பெண்கள் வாழ்வு மேம்படவும், பெண்ணுரி மையை உறுதிப்படுத்தும் வகையிலும், பெண்கள் இன்னல்களில் இருந்து விடுபடவும், அவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடவும், பெண்கள் அனைத்து நிலைகளிலும் சிறப்புற்று வாழ வேண்டும் என்பதற்காகவும், தமது தலைமையிலான அரசு செய்துள்ள அளப்பரிய சாதனைகளை பட்டியலிட்டு, பெண்கள் அனைவருக்கும் தமது நல்வாழ்த்துகளை தெரிவித்திருந்தார்.
தலைமைக் கழகத்தில் கொண்டாட்டம்...
அதனைத் தொடர்ந்து, சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழகத்தில் இன்று காலை அ.தி.மு.க. மகளிர் அணியினர் அனைவரும் பெருந்திரளான அளவில் திரண்டிருந்து தங்களுக்குள் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர்.
கோகுல இந்திரா...
அ.தி.மு.க. மகளிர் அணியின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கேக்கினை, மகளிர் அணிச் செயலாளரும், அமைச்சருமான கோகுல இந்திரா கேக் வெட்டி, அதை அமைப்புச் செயலாளரும், தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத் தலைவருமான டாக்டர் விசாலாட்சி நெடுஞ்செழியன், இலக்கிய அணிச் செயலாளரும், அமைச்சருமான வளர்மதி, மகளிர் அணி துணைச் செயலாளரும், தமிழ்நாடு சமூக நல வாரியத் தலைவருமான சி.ஆர். சரஸ்வதி மற்றும் மகளிர் அணி துணை நிர்வாகிகள் உள்ளிட்ட வந்திருந்த ஆயிரக்கணக்கான மகளிர் அனைவருக்கும் கேக் வழங்கி மகளிர் தினத்தை சிறப்பாகக் கொண்டாடினர்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைதியான கொண்டாட்டம்...
தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. இதனால், பெரிய ஆர்ப்பாட்டங்கள் இல்லாது அமைதியாக நடந்து முடிந்தது இந்த விழா.
மாபெரும் பேரணி...
கடந்தாண்டு தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா அறிவுறுத்தலின்படி சென்னையில் அதிமுக மகளிர் அணி சார்பில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற மாபெரும் பேரணி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
அசத்தல் குத்தாட்டம்
இந்தக் கொண்டாட்டத்துக்கு மத்தியில் சில பெண் தொண்டர்கள் சாலையில் குத்தாட்டம் போடவும் தவறவில்லை. அதேபோல சிலர் கைக்குக்கு கிடைத்த கேக்கை எடுத்துக் கொண்டும் நடையைக் கட்டினர்.