ஜெயலலிதாவுக்கு சிறை: தமிழகம் முழுவதும் அதிமுகவினர் உண்ணாவிரதம்- மீனவர்கள் வேலைநிறுத்தம்
சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிற்கு சிறைதண்டனை விதிக்கப்பட்டதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் ஆயிரக் கணக்கான அதிமுக தொண்டர்கள் வாயில் கருப்புத்துணி கட்டி உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மகளிரணியினர் ஒப்பாரிவைத்தும், தொண்டர்கள் சிலர் மொட்டை அடித்து தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தினர்.
கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களும் தஞ்சை மாவட்ட மீனவர்கள்,புதுக்கோட்டை மற்றும் நாகை மாவட்ட மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்
புதுக்கோட்டையில் உண்ணாவிரதம்
புதுக்கோட்டை மாவட்டஇளைஞர் இளம்பெண்கள் பாசறைச்செயலர்ஆர்.ராஜசேகரன் தலைமையில் புதுகை பழைய பேருந்துநிலையத்தில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் பங்கேற்றனர்.
மொட்டையடித்து ஒப்பாரி
அதிமுகதொண்டர்கள் பலரும் நீதி செத்துவிட்டதாகக்கூறி தலையை மொட்டையடித்துக்கொண்டனர். மேலும், மகளிரணி நிர்வாகிகள் ஒப்பாரி வைத்து அழுதனர்.
தர்மபுரியில் உண்ணாவிரதம்
தர்மபுரி ஒன்றியம், தர்மபுரி நகரம், நல்லம்பள்ளி ஒன்றியத்தை சேர்ந்தவர்கள் தர்மபுரி பஸ்நிலையம் முன்பு உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். மாவட்ட செயலாளர் பூக்கடை முனுசாமி தலைமையில் இந்த உண்ணாவிரதம் நடைபெற்றது.
தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏக்கள்
சென்னையில் எம்ஜிஆர் நினைவிடத்தின் அருகே அதிமுக எம்.எல்.ஏக்கள் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். அதில் தேமுதிக அதிருப்தி எம்எல்ஏக்கள் பங்கேற்றுள்ளனர்.
திருப்பூரில் உண்ணாவிரதம்
திருப்பூர் ரயில் நிலையம் முன்பு குமரன் சிலைக்கருகில் காலை எட்டு மணியிலிருந்து துணை மேயர் தலைமையில் மாலை ஐந்து மணிவரையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
மாணவர்கள் போராட்டம்
ஜெயலலிதாவுக்கு ஆதரவாக மேலூர் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் இன்று வகுப்புப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல புதுக்கோட்டை அரசுக்கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ரயில்மறியல் எம்.எல்.ஏக்கள் கைது
புதுவை நகர அ.தி.மு.க. சார்பில் இன்று ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. புதுவையில் இருந்து மங்களூர் செல்லும் ரயிலை மறித்து அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். 4 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 1000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
மீனவர்கள் வேலைநிறுத்தம்
நாகை அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், கல்லாறு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த திரளான மீனவர்கள் வேலைநிறுத்தம் மேற்கொண்டு, நாகை தலைமை அஞ்சலகம் முன்பு உண்ணாவிரதம் இருந்தனர். சீர்காழி அருகே உள்ள பழையாறு, புதுப்பட்டினம், திருமுல்லைவாசல், பூம்புகார், வானகிரி, நாயக்கர்குப்பம் உள்பட சுமார் 20 மீனவக் கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் பலர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு சில கிராமங்களில் அதிமுக ஆதரவு மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டனர்.