6 லட்சம் எஞ்சினியரிங் இடங்கள் ”கட்” - ஏஐசிடிஇ; தமிழகத்தில் 60 ஆயிரம் இடங்களுக்கு மேல் குறையும்!
சென்னை: இந்தியாவில் மாணவர்களிடையே பொறியியல் துறைக்கு மவுசு குறைந்து வருகின்ற நிலையில், பல லட்சம் காலியிடங்கள் பொறியியல் கல்வியில் கிடப்பதால் தேசிய தொழில்நுட்பக் கல்வி வாரியம் கிட்டதட்ட 6 லட்சம் பொறியியல் இடங்களை குறைக்க உள்ளது.
இதனால் தமிழகத்தில் மட்டும் கிட்டதட்ட 60 ஆயிரத்திற்கும் மேலாக பொறியியல் இடங்கள் குறைக்கப்பட வாய்ப்புள்ளது.
"தற்போது 16.7 லட்சமாக இருக்கின்ற பொறியியல் இடங்களை 10ல் இருந்து 11 லட்சமாக குறைக்க உள்ளோம்" என்று ஏஐசிடிஇ தலைவர் அனில் சகஸ்ரபுத்தே தெரிவித்துள்ளார்.
தரமான கல்விச் சூழல்:
இதன் மூலமாக மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. மாறாக தரமான கல்விச் சூழ்நிலை உருவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திலும் உண்டு:
முன்னாள் ஏஐசிடிஇ தலைவரும், முன்னாள் ஐஐடி மெட்ராஸ் இயக்குனருமான ஆர். நடராஜன், " தமிழகம் மற்றும் ஆந்திராவில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் பல இடங்கள் குறைக்கப்பட உள்ளன. ஏனெனில், இடங்களை விட மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
8 லட்சம் இடங்கள் காலி:
மழைக்காளானாய் முளைக்கும் பொறியியல் கல்லூரிகளும் இந்த காலியிடங்களுக்கு காரணமாக உள்ளன. இந்த வருடம் மட்டும் கிட்டதட்ட 8.45 லட்சம் சீட்கள் காலியாக உள்ளன.
30 சதவீதம் பேருக்கே வேலை:
மேலும், கல்லூரிகளின் தரம் குறைந்த காரணத்தினால் வருடத்திற்கு 30 சதவீத மாணவர்கள் மட்டுமே நல்ல வேலையில் அமர்கின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.