தமிழகத்தில் 20 பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு தடை!
சென்னை: தமிழகத்தில் இயங்கும் 20 தனியார் பொறியியல் கல்லூரிகள் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடத்தக் கூடாது என்று அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் தடை விதித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிகளின் தரம் தாழ்ந்து வருவது குறித்த புகார்களின் அடிப்படையில், சுமார் 40 கல்லூரிகளில் திடீர் சோதனை நடத்தப்பட்டது. இதில் 20 கல்லூரிகளில் மாணவர்களுக்கான எந்த அடிப்படை வசதிகளும் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, நடப்பு கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை நடத்தக் கூடாது என இந்த கல்லூரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் இந்த கல்லூரிகள் அங்கீகரிக்கப்படாத பாடத் திட்டங்களை நடத்தி வந்ததும் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். சோதனை நடந்த கல்லூரிகளில் ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் ஆய்வக குறைபாடுகள் கண்டறியப்பட்டதாகவும் தெரிகிறது.
இதனிடையே தமிழகத்தில் புதிதாக மேலும் 7 பொறியியல் கல்லூரிகள் துவங்க தேசிய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் அனுமதி அளித்துள்ளது கல்வியாளர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
"தமிழகத்தில் புற்றீசல் போல பெருகி வரும் பொறியியல் கல்லூரிகளால் கல்வியின் தரம் குறைந்து வரும் நிலையில், மேலும் சில புதிய கல்லூரிகள் துவங்க அனுமதி அளித்துள்ளது ஆரோக்கியமானது அல்ல" என்று கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.