மின் கட்டண உயர்வை ரத்து செய்க: அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தல்
சென்னை: ஏழை, எளிய மக்களை பாதிக்கும் அநியாய மின் கட்டண உயர்வை கண்டித்தும், மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும், அனைத்திந்திய ஜனநாயக மாதர்சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக அரசு மின்கட்டணத்தை 15 சதவீதம் உயர்த்தி அறிவித்தது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அனைத்திந்திய ஜனநாயக மாதர்சங்கத்தின் தென்சென்னை மாவட்டக் குழு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். தமிழக அரசுக்கு எதிராகவும் மின்வாரியத்திற்கு எதிராகவும் அவர்கள் முழக்கமிட்டனர். மின் கட்டணத்தை உயர்த்தி ஏழைகளின் வயிற்றில் அடிக்காதே, மின் உற்பத்தியை பெருக்குவதற்கு நடவடிக்கை எடு என்று முழக்கமிட்ட அவர்கள், அரசுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை தாங்கியிருந்தனர்.
இதேபோல மின்கட்டண உயர்வை கண்டித்து கோவில்பட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாதாங்கோவில் ரோடு படித்துறையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் பரமராஜ் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் அழகுமுத்துப்பாண்டியன் பேசினார். ஆர்ப்பாட்டத்தின்போது மின் கட்டண உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.தாலுகா செயலாளர் சேதுராமலிங்கம், நகரக் குழு உறுப்பினர்கள் செந்தில்குமார், செல்லையா, சங்கரப்பன், அலாவுதீன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் முனியசாமி, மாதர் சங்கம் சரோஜா, கோமதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.