தமிழகத்துக்கான எய்ம்ஸ் மருத்துவமனையை கர்நாடகாவுக்கு கொண்டு போக சதி... வீரமணி காட்டம்
தமிழகத்துக்கான எய்ம்ஸ் மருத்துவமனை திட்டத்தை கர்நாடகாவுக்கு மாற்ற சதி நடப்பதாக தி.க. தலைவர் வீரமணி குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை: தமிழகத்தில் அமைய வேண்டிய எய்ம்ஸ் மருத்துவமனையை கர்நாடகாவுக்கு கொண்டு போக சதி நடப்பதாக திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி சாடியுள்ளார்.
இது தொடர்பாக இன்று வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கை:
பிரதமர் மோடி பதவிக்கு வந்தவுடன், மத்திய பட்ஜெட்டிலே நிதியமைச்சர் அருண்ஜெட்லி, அதற்குமுன் மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் ஆகியோர், தமிழ்நாட்டில் ஓர் நகரத்தில் உயர்தரமான All India Institute of Medical Service (AIIMS) என்ற 'எய்ம்ஸ்' மருத்துவமனை அமைக்கப்படும் என்று அறிவித்து, மாநில அரசுடன், நில ஒதுக்கீடு முதலியவற்றைப் பற்றிய கருத்துப் பரிமாற்றம்-கடிதப் போக்குவரத்துகளும் நடைபெற்றன.
தமிழக சட்டமன்றத்திலும் முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டில் மத்திய அரசு அமைக்கவிருக்கும் 'எய்ம்ஸ்' மருத்துவமனை - புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனை போன்று அமையும் என்றெல்லாம் கூறினார். தமிழ்நாடு அரசு, மத்திய அரசு கேட்டதற்கு மறு மொழியாக, எட்டு நகரங்களைத் தேர்ந்தெடுத்து அனுப்பியது! அதோடு அத்தகைய 'எய்ம்ஸ்' மருத்துவமனை அமைவதற்குத் தேவையான உள்கட்டமைப்புகளையும் மாநில அரசு செய்து தரும் என்றும் உத்தரவாதம் கூறப்பட்டது
200 ஏக்கர் நிலம்
அத்தகைய சிறப்பு மருத்துவமனை அமைவதற்குத் தேவையான 200 ஏக்கர் நிலம், உயர்தரமான சாலை வசதிகள், ரயில் நிலைய வசதிகள் போன்ற அத்துணை கட்டமைப்புகளையும் கூடச் செளிணிது தரத் தயார் என்றும் கூறப்பட்டது. மத்தியக் குழுவினர் வருகை தந்து பல நாள்கள் ஆராய்ந்த நிலையில், இறுதிக்கட்டத்தில், மதுரை மற்றும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறையையும் இந்தக் கட்டமைப்புடன் உள்ள ஏற்ற இடங்கள் என்பதாகத் தேர்வு செய்யப்பட்டது!
பெருந்துறை
தமிழ்நாடு அரசும் பெருந்துறையில் தேவைக்குமேலேயே - 350 ஏக்கர் நிலம் அளிக்கத் தயாராகி, முன்வந்தது! தமிழ்நாட்டு மக்களும் நம்பிக்கையுடன் இருந்தார்கள். இந்நிலையில், பெரும் அதிர்ச்சியான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது!
தகுதியே இல்லையா?
இது உண்மையாக இருக்காமல், பொய்த்துவிட வேண்டும் என்று நாம் விரும்பினாலும், இது உண்மையாகி விடும் வாய்ப்பும் 50 விழுக்காடு உள்ளது! தமிழ்நாட்டில் உள்ள எந்த நகரமும் ‘எய்ம்ஸ்' மருத்துவமனை அமையத் தகுதி உடையதாக இல்லை என்று கூறியுள்ளனராம்!
கர்நாடகாவுக்கு போகிறது?
எப்படியாவது இந்த ‘எய்ம்ஸ்' சிறப்பு மருத்துவமனையை கருநாடகத்திற்கோ, ஆந்திராவிற்கோ கொண்டு செல்ல ஏற்பாடுகள் மும்முரமாக, முழு வீச்சில் நடைபெறுகின்றன என்பது மற்றொரு அதிர்ச்சிக்குமேல் அதிர்ச்சியான செய்தியாக உள்ளது! கிண்டியில் உள்ள ‘சிப்பெட்' தலைமையகத்தை டில்லிக்குக் கொண்டு போக முனைந்ததை எதிர்த்துக் கிளம்பிய புயல் காரணமாகவே, அதற்கு மூலகாரணமான கருநாடகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் அனந்தகுமார் அய்யர் அவர்கள் ஒப்புக்கு அதனை மறுத்துள்ளார்!
அறப்போர் கிளர்ச்சி
தமிழனின் நெற்றிதான் எவ்வளவு அகலம் பார்த்தீர்களா? பட்டை பட்டையாக, நாமத்திற்குமேல் நாமம் போட்டுக் கொண்டே போகிறது டில்லி! குட்டக் குட்ட குனிபவர்களா தமிழர்கள்? எனவே, டில்லியின் இந்த ஓரவஞ்சகத்தை எதிர்த்து விரைவில் திராவிடர் கழகம், ஒத்த கருத்துள்ள அனைவரையும் அழைத்து, கலந்துரையாடி, அறப்போர் கிளர்ச்சித் திட்டத்தை வகுத்துச் செயல்படுத்தத் தயங்காது என்பதை டில்லி மத்திய அரசுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம். உரிமைக்குக் குரல் கொடுப்பது அவசரம் - அவசியம்.
இவ்வாறு வீரமணி கூறியுள்ளார்.