ஜெ. சிகிச்சை விவரங்கள்... தமிழக அரசிடம் தாக்கல் செய்த டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள்!
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை தமிழக அரசிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
சென்னை: அப்பல்லோவில் 75 நாட்கள் சிகிச்சை பெற்று டிசம்பர் 5ஆம் தேதி மரணமடைந்த ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து எய்ம்ஸ் மருத்துவர்கள் தமிழக அரசிடம் அறிக்கை தாக்கல் செய்து உள்ளனர்.
செப்டம்பர் 22ஆம் தேதி உடல்நலக்குறைவினால் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் வரை எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து கில்நானி தலைமையிலான குழுவினர் 5 முறை அப்பல்லோவிற்கு வந்து ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்தனர்.
எனினும் டிசம்பர் 5ஆம் தேதி ஜெயலலிதா மரணமடைந்தார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக பலரும் தெரிவித்தனர். இதனையடுத்து லண்டன் ரிச்சர்ட், அப்பல்லோ மருத்துவர்கள் விளக்கம் அளித்தனர்.
ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்த எய்ம்ஸ் மருத்துவர்கள் அறிக்கை தாக்கல் செய்யாதது ஏன் என்ற கேள்வி எழுந்தது. இதனையடுத்து எய்ம்ஸ் மருத்துவர்கள் அளிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசு கேட்டுக்கொண்டது. இதனையேற்று டெல்லி எய்ம்ஸ் துணை இயக்குநர் ஸ்ரீநிவாஸ் தமிழக சுகாதாரச் செயலர் ராதா கிருஷ்ணனிடம் அறிக்கையை ஒப்படைத்தார். 5 அறிக்கைகளை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் தமிழக அரசிடம் தாக்கல் செய்துள்ளது.