மதுரை தோப்பூரில் எய்ம்ஸ்.. மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கவில்லை.. ஆர்டிஐ அதிர்ச்சி!
மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் அமைய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கவில்லை என்று தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை: மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் அமைய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கவில்லை என்று தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தகவல் வெளியாகி உள்ளது. மக்கள் விழிப்புணர்வு அறக்கட்டளையை சேர்ந்த ஹக்கிம் இந்த தகவலை பெற்று இருக்கிறார்.
மத்திய அரசின் சகல மருத்துவ வசதிகளும் கொண்ட எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்தில் மதுரையில் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தோப்பூரில் 200 ஏக்கர் நிலப்பரப்பில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது.
இந்தியா முழுக்க புதிதாக மொத்தம் 14 இடங்களில் இந்த எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட உள்ளது.
தாமதம்
பல தேர்வுகள், அலைக்கழிப்புகளை அடுத்து மதுரையில் உள்ள தோப்பூர் இதற்காக தேர்வு செய்யப்பட்டது. இதற்கே பல மாதங்கள் வீணானது. இந்த மருத்துவனைக்கு தமிழக அரசு சார்பாக மின்சாரம், தண்ணீர் வசதி, பேருந்து வசதி ஆகியவை அளிக்கப்பட வேண்டும். இதற்காக இன்னும் சில விதிமுறைகளை மத்திய அரசு தமிழகத்திடம் அளித்துள்ளது.
[ஹைட்ரோ கார்பன் திட்டம்: டெல்டாவில் 2 இடங்களில் ஆய்வு செய்யும் ஸ்டெர்லைட்! ]
ஆர்டிஐ கேள்வி
இந்த நிலையில் மதுரையை சேர்ந்த மக்கள் விழிப்புணர்வு அறக்கட்டளை அமைப்பை சேர்ந்த ஹக்கிம் என்ற நபர் இதுகுறித்து தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் சில கேள்விகளை எழுப்பி இருந்தார். மத்திய சுகாதாரத்துறைக்கு, நிதிக்குழுவிற்கும் சில கேள்விகளை எழுப்பி இருந்தார். இதற்கான பணிகள் எப்போது தொடங்கும், எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது என்று கேள்வி எழுப்பினார்கள்.
என்ன பதில்
இதற்கு மத்திய சுகாதாரத்துறை அளித்த பதில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் அமைய மத்திய அமைச்சரவை இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை என ஆர்டிஐ மூலம் தகவல் அளிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் நிதி குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் கூறப்பட்டு இருக்கிறது.
என்ன விளக்கம்
இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார். அதில் இதற்கான பணிகள் நடந்து வருகிறது. மத்திய அரசின் குழுவை இதற்காக அடுத்த மாதம் 8ம் தேதி சந்திக்க இருக்கிறோம். மதுரையில் எய்ம்ஸ் அமைவதில் எந்த தடைகளும் கிடையாது. அரசு படிப்படியாகத்தான் நடவடிக்கை எடுக்கும். இது மிகப்பெரிய திட்டம்'' என்று கூறியுள்ளார்.