தண்டவாளத்தில் விரிசல்.. பெரும் விபத்திலிருந்து சென்னை மின்சார ரயில்கள் தப்பின!
சென்னை: சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மார்க்கத்தில் கோடம்பாக்கம்- மாம்பலம் இடையே தண்டவாளத்தில் ஏற்பட்டிருந்த விரிசல் உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
கோடம்பாக்கம் ரயில் நிலையக் கட்டுப்பாட்டு அறைக்கு, மாம்பலம் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருப்பதாக தகவல் வந்தது. இதையடுத்து கடற்கரை - தாம்பரம் இடையிலான அனைத்து மின்சார ரயில்களும் ஆங்காங்கு நிறுத்தப்பட்டன. கோடம்பாக்கம் - மாம்பலம் இடையே, கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் மேம்பாலம் அருகே, தண்டவாளத்தில் விரிசல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து விரிசலை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் இறங்கினர்.
இந்த விரிசல் காரணமாக கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு ரயில்கள் இயங்கவில்லை. இருபக்கமும் ரயில்கள் அணிவகுத்து நின்றன. ஆயிரக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டனர். பலர் ரயில்களை விட்டு இறங்கி பஸ்களைப் பிடிக்க ஓடினர். பலர் ரயில்களிலேயே காத்துக் கிடந்தனர்.
ரயில் தண்டவாள விரிசல் சரி செய்யப்பட்ட பின்னர் ஒரு மணி நேர தாமதத்திற்குப் பின்னர் ரயில்கள் மீண்டும் ஓடத் தொடங்கின.
கடும் குளிர், திடீர் வெயில் என பருவ நிலை மாறுபாட்டால், தண்டவாளத்தில் சில நேரங்களில், இதுபோன்ற விரிசல் ஏற்படும் என்று ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர். ஏர் கிராக் என்பதால் இதை உடனடியாக சரி செய்ய முடிந்ததாம். விரிசல் கண்ட தண்டவாளத்தில் ரயில்கள் போயிருந்தால் பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும். அதிர்ஷ்டவசமாக அது தவிர்க்கப்பட்டு விட்டது.